தமிழ் தாத்தான்னு வன்னியர், தேவர், நாடார் உண்டா? தமிழுக்கு பாடுபட்டது ஐயர்தான்: தாம்ப்ராஸ் நாராயணன்
சென்னை: தமிழுக்கு பாடுபட்டவர் 'தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதன் ஒரு ஐயர் எனவும், வன்னியர், செட்டியார், தேவர் சமூகங்களில் இருந்து யாராவது தமிழுக்காக பாடுபட்டு இருக்கிறார்களா என தாம்ப்ராஸ் அமைப்பின் தலைவரான நாராயணன் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது அவதூறு பிரச்சாரம் நடத்தி வருவதாகவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாய தலைவர்கள், தமிழக பிராமண சமூகத்தினர், நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது பேசிய நடிகை கஸ்தூரி காஷ்மீரில் நடப்பது மட்டும் படுகொலை அல்ல. ஒரு சமுதாயத்தை அழிப்பதும் இனப் படுகொலை தான். பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது பிராமணர் சமூகம். இந்த கைபர் கணவாய் வழியாக வந்தவர்களை பற்றி பேசினால் உங்கள் ஓட்டுகள் தான் குறையும் என பேசினார். அது மட்டும் அல்லாமல் தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதாக கஸ்தூரிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்ததோடு அவருக்கு எதிராக பல மாவட்டங்களில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பிராமணர் சங்க ( தம்ப்ராஸ்) மாநில தலைவர் ஆன நாராயணன்," சமீப காலமாக பிராமண துவேஷம் என்பதை நாம் பொறுத்துக் கொண்டு வந்தோம். சகித்துக் கொண்டு வந்தோம். தற்போது லக்ஷ்மன் ரேகை என்ற எல்லைக்கோட்டை அது தாண்டிவிட்டது. இதனால் நாம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 400க்கும் அதிகமான கிளைகளை நிறுவியுள்ளோம். தமிழக முழுவதும் பிராமணர்கள் ஒற்றுமை அருமையாக இருக்கிறது. பிராமணர்களை கோழை என்றோ பலவீனமானவர்கள் என்றோ நினைக்கக் கூடாது. தமிழகத்தில் ஆறாவது பெரிய சமூகம் பிராமணர்கள். பிராமணர்கள் மனதை குலைக்கும் முயற்சிக்கின்றனர். குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது" என பேசி இருந்தார். இது தனியே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தம்ப்ராஸ் நாராயணன் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பேசியிருக்கும் நாராயணன்," தமிழ் தாத்தா என்று உ.வே.சுவாமிநாத ஐயரை அழைக்கின்றனர். அவர் ஒரு பிராமணர் தமிழுக்காக பாடுபட்டவர்கள் ஐயர் தான். வன்னியர் சமூகத்திலிருந்து தேவர் சமூகத்திலிருந்து, செட்டியார் சமூகத்தில் இருந்தோ அல்லது நாடார் சமூகத்தில் இருந்தோ யாராவது தமிழுக்கு பாடுபட்டு இருக்கிறார்களா?" என அவர் பேசியிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications