காசியில் தவிக்கும் தமிழக யாத்ரீகர்களை மீட்க வேண்டும்... தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
சென்னை: காசி விஸ்வநாதர் கோயிலுக்கு யாத்திரை சென்ற தமிழர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என அறைநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் காசிக்கு புனித யாத்திரை சென்ற நூற்றுக்கணக்கானோர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மீட்பதற்கு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பமுடியாமல் உள்ள தகவலறிந்த தமிமுன் அன்சாரி, இது குறித்து நேற்று மாலை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காசி கோயிலுக்கு சென்ற பக்தர்கள், தமிழகம் வர 3 பேருந்துகளில் தயார் நிலையில் இருப்பதாகவும், தமிழக அரசு இது தொடர்பாக உ.பி அரசிடம் பேசினால் உரிய அனுமதி சீட்டு பெற்று அவர்கள் வர இயலும் என்றும் கூறினார்.
மேலும், இதற்கு துறையின் அமைச்சராகிய நீங்களும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டார். இதனை தனது கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக தமிமுன் அன்சாரிக்கு நன்றி கூறிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மதமாச்சரியங்களை கடந்து காசி யாத்ரீகர்களுக்காக தமிமுன் அன்சாரி குரல் கொடுத்திருப்பது இதில் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications