நான் 3 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த ஒன்று நேற்று தான் கிடைத்தது! அனுபவம் பகிரும் தமிமுன் அன்சாரி!
சென்னை ; சென்னையில் புத்தக கண்காட்சிக்கு செல்வதை அறிவு சுற்றுலாவாக கருத வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.
மேலும், 3 ஆண்டுகளாக தாம் தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை நேற்றைய தினம் சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கப்பெற்றதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதன் விவரம் பின்வருமாறு;

புத்தக கண்காட்சி
நேற்று சென்னையில் நடைபெறும் 45-வது புத்தக கண்காட்சிக்கு தோழமைகளுடன் சென்றிருந்தேன். ஈராண்டுகளாக கொரோனா நெருக்கடிகளால் களை இழந்த புத்தக திருவிழா இவ்வாண்டு எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. நல்ல கூட்டம். புத்தகங்கள் வாங்க குவிந்த பிரியர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என எங்கும் மக்கள் திரள். இங்கு வருவதே ஒரு அறிவு சுற்றுலாவாகும். எம்மை போன்றவர்களுக்கு இது மன எழுச்சியை ஏற்படுத்தும் நிகழ்வு.

பிடித்த நூல்கள்
நமக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள், நமக்கு தெரியாத படைப்பாளிகள் எழுதிய நூல்கள் என அவற்றுடன் சங்கமிக்கும் அனுபவங்கள் அலாதியானது. நாம் எதிர்பார்க்காத புத்தகங்கள் நம்மை வசப்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே..) என்ற நூல் அப்படி என்னை வசப்படுத்தியது. தமிழகத்திலிருந்து சென்ற தொழிலாளிகளின் கண்ணீர் வரலாறு குறித்த நூல் அது. புத்தகங்களின் தலைப்புகள் ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.

செல்ஃபி எடுத்தனர்
ஜேக் வெதர் ஃபோர்ட் என்பவர் எழுதிய 'செங்கிங்கானும் நவீன உலகின் உருவாக்கமும்' என்ற நூல் அந்த வகையாகும். புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்ட விதம் ஒரு வித விற்பனை புதுமை எனலாம். அப்படி ஒரு கடையில் உற்று பார்த்தப் போது, 1559-ல் ரோமப் பேரரசால் தடை செய்யப்பட்ட 'The Prince ' என்ற நூல் கிடைத்தது. அது இத்தாலிய சாணக்கியன் நிக்கோலா மாக்கிய வல்லி குறித்த பரபரப்பான நூலாகும்! இங்கு பயணிக்கும் போது அன்பர்கள் நம்மை தேடி வந்து அளவளாவுவதும், செல்ஃபி எடுப்பதும் ஒரு வித அனுபவமாகும்.

சந்திக்க விரும்பும் பலர்
அதுபோல் நாம் சந்திக்க விரும்பும் பலரையும் சந்திக்கும் வாய்ப்பும் இங்கு ஏற்படுகிறது. ஐயா. நீதியரசர் சந்த்ரு அவர்களை சந்தித்து அவர் எழுதி பரபரப்பாக விற்பனையாகும் 'நானும் நீதிபதியானேன்' என்ற நூலை பெற்றுக் கொண்டேன். அவரது புரட்சிகர ;மனிதநேய தீர்ப்புகள் வரலாற்று குறிப்புகளாகும். அந்நூலில் நீண்ட கால சிறைவாசி மதானி குறித்து தான் எழுதியதை மறவாமல் வாசியுங்கள் என்றார். அவர் ஒரு மனித உரிமை சிந்தனையாளர் அல்லவா? அடுத்து அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களை சந்தித்தப் போது தனது 'போர்க்களம் ' நூலை பரிசளித்தார். அவரிடம் எப்போதும் காணப்படும் உற்சாகம் அப்போதும்!

நட்பு வட்டம்
எனக்கு அவர் கையெழுத்திட்டு தந்த நூலில் எழுதிய வாசகம் கவனிக்க வைத்தது. அது 'வெற்றியின் அடையாளம் துணிச்சல் ; துணிந்தவர் தோற்பதில்லை' என்பதாகும்!பல கடைகளுக்கு சென்ற போது அவர்கள் தங்களது புதிய படைப்புகளை வெளியிட கூறி என்னோடு படம் எடுத்து கொண்டனர். நமது நட்பு வட்டாரங்களுக்கு அந்த நூல்கள் சென்று சேர வேண்டும் அதன் நோக்கமாகும்.

இன்ப அதிர்ச்சி
நேற்றைய நிகழ்வில் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. நான் 3 ஆண்டுகளாக தேடி கொண்டிருந்த அந்த புத்தகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அது பண்டைய சீன தளபதி சன் - ஸு எழுதிய 'போர்க் கலை' நூலாகும். இப்படி பல அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு கிடைக்கிறது. நீங்களும் வாருங்கள். புத்தக சந்தையில் உங்களை தொலையுங்கள்.
உங்களை நீங்களே கண்டெடுக்க அது உதவும்.












Click it and Unblock the Notifications