ரகுபதி ராகவ ராஜாராம்! ஈஸ்வரே அல்லா தேரே நாம்! ராட்டை சுற்றிய விவசாயிகள்! தமிமுன் அன்சாரி பகீர் தகவல்
சென்னை: மணிப்பூரில் நடப்பதை சமூக- இன மோதலாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும் அதில் குக்கி இன விவசாயிகளின் மலை நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டமும் உள்ளதாகவும் பகீர் கிளப்பியிருக்கிறார் தமிமுன் அன்சாரி.
சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

அதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதாவது;
"விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். அவரது வழியில் ராட்டையை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போது, விவசாயிகளின் பிரதிநிதியாகவே செயல்பட்டேன்.
விவசாயிகள் என்பவர்கள் கபடமற்ற தொழிலாளிகள். பயிர்களும் வாழ வேண்டும், உயிர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
எனவே, விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் விவசாயிகள் பல வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள்.
மணிப்பூரில் நடப்பது சமூக- இன மோதலாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனை அதில் உள்ளது. குக்கி இன விவசாயிகளின் மலை நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம் அதில் உள்ளது.பழங்குடியின உரிமையை மற்றவர்களுக்கும் கொடுத்து, அதன் வழியாக நிலங்களை பறித்து, அதானி - அம்பானிகளுக்கு வழிவிடும் சதி அதில் அடங்கியுள்ளது.
அதுபோல் ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு பின்பும் ஒரு காரணம் உள்ளது. அந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்களிடம் சொந்த நிலங்கள் உள்ளது. டெல்லியில் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு உணவு அனுப்பி உதவியவர்கள் அவர்கள் தான்.

அதனாலேயே இப்போது குறிவைக்கப்பட்டுள்ளார்கள். இதை அறிந்துக்கொண்ட ஹரியானா விவசாயிகள், தங்களது சக முஸ்லிம் விவசாயிகளுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். எனவே, விவசாயிகள் நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளின் பின்னணி நுட்பங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.இப்போது நாம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளைத் தான் வைக்கிறோம்.
நெருக்கடி கொடுக்கும் நோக்கம் இல்லை. எனவே, இக்கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.தாய்லாந்து விவசாயிகள் தங்களது உற்பத்தியை உலக சந்தைக்கு கொண்டுச் செல்கிறார்கள். நுங்கையும், இளநீரையும் கூட டின்களின் அடைத்து விற்கிறார்கள். இங்கு நாம் இளநீரின் மகத்துவத்தையும், பனை மரத்தின் பொருட்களையும் உலகளவில் சந்தைப்படுத்தாமல் உள்ளோம்.
உள்நாட்டில் தென்னையிலிருந்து உருவான 'நீரா பானம்' என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.விவசாயிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாகும்."












Click it and Unblock the Notifications