குட் நியூஸ்! சட்டசபையில் பேசப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம்! அரசு ஊழியர்களுக்கு தங்கத்தின் உறுதி!
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இன்று நிதி துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதங்களின் போது அவர் பதிலளித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இரு வேளைகளாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார், மேலும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு கேள்வி நேரம் நடந்தது. அப்போது நிதி, மனித வள மேலாண்மை ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வு கால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்தது.
அப்போது நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் சாத்தியக் கூறுகளை ஆராய அமைத்த குழு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதை செயல்படுத்த கோரிக்கை எழுந்த போதிலும் அது முடியாது என நிதித் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்திருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய போது தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ 2 லட்சம் செலவாகிறது. அதே நேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனி நபருக்கு ரூ 50 ஆயிரம்தான் செலவாகிறது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லாதது என்றார்.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலேயே எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார் என ஜாக்டோ ஜியோ சங்கம் தெரிவித்திருந்தது. இந்த திட்டம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்குமே புதிய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கவே புதிய திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் பாதித் தொகையை பெற்று வந்தனர். அதற்காக அவர்கள் ஒரு பைசா கூட செலுத்தத் தேவையில்லாத நிலை இருந்தது. ஆனால் தேசிய ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட புதிய என்பிஎஸ் திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீதம் பங்களிப்புத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படுகிறது. இதே அளவு தொகையை அரசும் கூடுதலாக சேர்க்கிறது.












Click it and Unblock the Notifications