செம அப்செட்டில் எடப்பாடியார்.. போற பக்கமெல்லாம் சறுக்குதே.. ஒரேயடியாக எகிறும் ஸ்டாலினின் மதிப்பு!
தொடர் சறுக்கலில் அதிமுக அரசு சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது
சென்னை: தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடை, பொள்ளாசி பாலியல் வழக்கு, பிறகு ரேஷன் கார்டு முன்பு பேனர் வைக்க தடை என அடுத்தடுத்த சறுக்கலில் சென்று கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு..!
தியேட்டரில் 100சதவீத இருக்கைகளுக்கு முதல்வர் அனுமதி தந்திருந்தார்.. விஜய்யின் கோரிக்கை மீது மிக குறுகிய காலத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது... இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மத்திய உள்துறை இந்த அறிவிப்பு குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளது... இதனால் தியேட்டர்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை எப்படி திரும்பபெறுவது என கையை பிசைந்துகொண்டிருக்கிறது அதிமுக அரசு... ஏனென்றால், ஒருவேளை திரும்ப பெற்று கொண்டால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை அதிமுக சந்திக்கவேண்டியிருக்கும்.
விமர்சனம்
எப்போது அரசாணையை திரும்ப பெற்று கொண்டாலும், உடனே அதை விமர்சிக்கவும் திமுக தயாராக உள்ளது.. திமுக மட்டுமில்லை, யார் இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் அதற்கு உரிய பதில் அதிமுகவிடம் இருக்காது என்றே தெரிகிறது.. கொரோனாவுக்கு பயந்து எல்லாருமே 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி தந்த நிலையில், உலகத்திலேயே 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தந்தது நம்ம முதல்வர்தான்.
ஆலோசனை
ஆனால், உள்துறை அதிருப்தியை வெளியிட்டும்கூட, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் உரிய முடிவு எடுப்பார் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளது நகைப்புக்குரியது... என்னதான் ஆலோசனை செய்தாலும், உள்துறைக்கு எதிரான முடிவை எடுக்க முடியாது.. அதனால், எப்படியும் இந்த விஷயம் அதிமுகவுக்கு ஒரு சறுக்கல்தான்.
அதிமுக
அதுபோலவேதான், பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. திடுதிப்பென்று சிபிஐ-யே இந்த விஷயத்தில் இறங்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. இதுசம்பந்தமாக அதிமுக நபரை கைது செய்ய போய், கொங்கு மண்டலமே அதிர்ச்சியில் உள்ளது.. இப்படிப்பட்ட சமயத்தில்தான், இன்னொரு பின்னடைவு அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது..
ரேஷன் கடை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் ரொக்கப் பணம் உள்பட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது... இந்த பொங்கல் பரிசு தொடர்பாக ஆளும்கட்சியினர், ரேஷன் கடைகள் முன்பு பேனர்கள் வைத்துள்ளதாக கூறி திமுக தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடந்தது.
திமுகவுக்கு வெற்றி
"ரேஷன் கடை அருகில் விளம்பரம், பேனர் இருக்கக் கூடாது. பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும், அதேபோல, ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கக் கூடாது, பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும்" என்று வழக்கில் உத்தரவிட்டுள்ளது. இது அதிமுக எதிர்பார்க்காத இன்னொரு சறுக்கல் ஆகும்.. அதேசமயம் திமுகவுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி ஆகும்.
முயற்சி
மெல்ல மெல்ல மக்களின் மனதில் இடம் பிடித்த அதிமுக, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கசப்பான விஷயங்களையும் சந்தித்து வருகிறது.. இன்னும் சில நாட்களே தேர்தல் உள்ள நிலையில், இவைகளை விரைவில் களைய எடப்பாடியார் சீரிய முயற்சிகளை மேற்கொள்வார் என்றே நம்புவோம்!