விஜய் நிகழ்ச்சி நடத்திய மண்டபத்திற்கு பின்னாடி.. காத்திருந்து முரட்டு சம்பவம்.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: நடிகர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சுவர் ஏறி இளைஞர்கள் உள்ளே குதிக்க முயன்ற நிலையில், அவர்களை கையும் களவுமாக பிடித்து பவுன்சர்கள் வெளியே அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடந்தது. முதற்கட்டமாக கடந்த ஜூன் 28ம் தேதி நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) விழா நடைபெற்றது. இந்த விழாவிலும் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருவாரூர், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகளிலிருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 740 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றார்கள்.
சென்னை திருவான்மியூர் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் நடிகர் விஜய் பேசுவதை அறிந்த தொண்டர்கள், விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றார்கள். ஆனால் பள்ளி மாணவ மாணவிகளுக்குகான விருது வழங்கும் விழா என்பதால் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சில ரசிகர்கள் எப்படியாவது விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தனியார் மண்டபத்தின் சுவரில் ஏறி குதிக்க முயற்சித்தனர்.
சிலர் பவுன்சர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எப்படியாவது உள்ளே புகுந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்பட்டனர். ஆனால் அப்படி யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி உள்ளே குதித்த இளைஞர்களை கையும் களவுமாக பிடித்த பவுன்சர்கள், தோளில் கை போட்டு, அன்பாக பேசி அவர்களை அப்படியே அனுப்பிவைத்தனர். இதனால் விஜய்யை பார்க்க முயன்ற ரசிகர்களின் முயற்சி கடைசியில் தோல்வியில் முடிந்தது.
இன்றைய விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களின் பெற்றோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விஜய், அரசியல் ரீதியாகவும் பேசினார்.. "நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து" என்று கூறிய விஜய், திமுக, பாஜக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அத்தனை அரசியல் கட்சிகளை அதிர வைத்தார்.
அதேபோல் விஜய் பேசிய இன்னொரு அரசியல் கருத்தும் மிகவும் முக்கியமானது, அதாவது "ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.
மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்துப் பாருங்கள்" என்று மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். இதுவும் விஜய் எந்த அளவிற்கு தமிழ்நாட்டு அரசியலை புரிந்து வைத்துள்ளார் என்பதை பார்க்க முடியும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications