பஞ்சமி நிலத்தில் முரசொலி? அவதூறாக பேசியதாக எல்.முருகன் மீது வழக்கு.. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை : பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் முரசொலி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் திமுகவின் முரசொலி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைசர் எல். முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்து இருந்தார்
இதற்கு முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதே கருத்தை தெரிவித்திருந்த நிலையில், இது தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முரசொலி நிலம்
இந்நிலையில் பாஜக மத்திய இணையமைச்சர் எல். முருகன் முரசொலி நிலம் குறித்து பொது வெளியில் தெரிவித்த கருத்து தொடர்பாக முரசொலி அறக்கட்டளை சார்பில் திமுக முக்கிய நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு
அவர் தாக்கல் செய்த மனுவில், வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியதாகவும், முரசொலி குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததற்காக எல்.முருகனைத் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஆர்.பாரதி அடிக்கடி ஆஜரான நிலையில், எல்.முருகன் ஆஜராகவில்லை. வழக்கு தொடர்ந்தபோது பாஜக மாநில தலைவராக இருந்த அவர், தொடர்ந்து பாஜக சார்பில் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக பல முறை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

நீதிமன்றம் உத்தரவு
வழக்கு தொடர்பாக கடந்த முறை ஆஜராக உத்தரவிட்டு போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என மத்திய இணையமைச்சர் எல். முருகன் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இன்றும் அமைச்சர் எல்.முருகன் ஆஜராகவில்லை. இதையடுத்து ஏப்ரல் 22ஆம் தேதி எல்.முருகன் ஆஜராக வேண்டும் என சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அலீசியா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications