எங்க அண்ணன் தான் எம்பி! தொண்டர்களை தூண்டி பல்ஸ் பார்க்கும் ‘தலைகள்’! என்ன தான் நடக்குது அதிமுகவில்?
சென்னை : மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடாமல் உள்ளது. இதனால் தாங்கள் தான் அதிமுக வேட்பாளர்கள் என அதிமுகவின் சில முக்கிய புள்ளிகள் தொண்டர்கள் மூலம் சமூக வலைதளங்களில் செய்திகளைப் பரப்பி வருவது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல்- இன்று வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்- அதிமுக வேட்பாளர்கள் யார்?
ராஜ்யசபா எம்பி வேட்பாளர்
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
திமுக பட்டியல்
திமுக, தனக்கான 4 இடங்களில் 3 இடங்களுக்கு போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். 3 இடங்களில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் குழப்பம்
ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை. இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்த முடியும் என நன்கு தெரிந்திருந்தும் அதிமுகவுக்கு பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை அதிமுக தரப்பிலிருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. காரணம் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வேட்பாளர் பட்டியல்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு வாய்ப்பு கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியை வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் தற்போது வரை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் குழப்பம் நீடிக்கிறது. இதனிடையே தங்களுக்கு எப்படியாவது எம்பி பதவி கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்த முக்கிய நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் மோதல்
மேலும் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்களது தொண்டர்கள் மற்றும் ஐடி விங் நிர்வாகிகள் மூலமாக சமூக வலைதளங்களில் இவர்தான் மாநிலங்களவை வேட்பாளர் என பதிவுகளை இட வைத்து அதன் மூலம் தலைமை என்ன நினைக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். அதிமுக தலைமை யாரை ராஜ்ய சபா எம்.பி. ஆக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் கட்சியின் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என தங்களது ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில், இராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியின் மனைவி கிருத்திகாவுக்கு தான் சீட் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இராமநாதபுரம் அரசியல்
இந்த சூழலில் பரமக்குடி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் தன்னுடைய முகநூலில், "பணத்துக்காக கட்சிப் பதவியை விற்பவர்கள், தேர்தலின் போது தலைமை கொடுத்த பணத்தை ஆட்டையைப் போட்டவர்கள், திமுகவினருடன் கூட்டணி அமைத்து சுயலாபத்திற்காக பணம் சம்பாதிப்பவர்கள், கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுக்காமல் சாதாரண தொண்டனுக்கு கிடைத்தால் மகிழ்ச்சியே" என புதிவிட்டிருந்தார்.
சதன் பிரபாகரன் காட்டம்
சதன் பிரபாகரன் பதிவை பார்த்த ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் ஒரு பிரிவினர் வசை பாடினாலும், இன்னொரு பிரிவினர் மாவட்ட செயலாளர் முனியசாமி குடும்பத்திற்கு எம்பி சீட் கொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்கலாம் என்றும், அவர் அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு கட்சிக்கு விரோதமாக முனியசாமி செய்த விவகாரங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளனர். இதனால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் எதிரிப்பை மீறி ராஜ்ய சபா எம்.பி. பதவியை மாவட்ட செயலாளர் முனியசாமி தன் மனைவி கீர்த்திகாவிற்கு வாங்கி விட்டாரென்றால் ஆச்சரியப்பட கூட விஷயமாகும் என்கின்றனர் அப்பகுதி அதிமுகவினர்.
கட்சிக்குள்ளேயே அரசியல்
இது குறித்து முன்னாள் எம்எல்ஏ சதன்பிரபாகரனிடம் கேட்டோம், "யாரை குறிப்பிட்டும், யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் நான் இதனை பதிவிடவில்லை. மாறாக, கட்சித்தலைமை நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், கட்சி நல்வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் போட்டு உள்ளேன்" என்கிறார் சூசகமாக. இராமநாதபுரத்தில் மட்டுமல்ல சென்னை, கோவை, விழுப்புரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் , முன்னாள் அமைச்சர்கள், தங்களுக்கு எப்படியாவது கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் எம்பி பதவியை பெற்று தங்கள் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும் என்பதால் தங்களது தொண்டர்களை வைத்து இந்த மாதிரியான புதுவித அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.