தாம்பரம் ரயில் நிலையத்தில் தாறுமாறான கூட்டம்.. ரயில்களில் ஏறுவதற்கு தவமே இருந்த மக்கள்
சென்னை: பொதுவாக சென்னையில் விடுமுறை நாட்களில் ரயிலில் ஏறுவது சிரமமானது.. அதுவும் தீபாவளி,ஆயுத பூஜை, பொங்கல், தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம் போன்ற காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறுவது சவாலானது. குறிப்பாக ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து ஏறுவது என்பது, கடைசி பாலில் சிக்சர் அடித்து ஜெயிப்பதற்கு சமம். அப்படி ஒரு சாகசம் நிறைந்தது. அந்த வகையில் விடிந்தால் ஆயுத பூஜை என்பதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அக்டோபர் 1 ஆயுதபூஜை, 2ம்தேதி விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறையாகும். இது வழக்கமான அரசு விடுமுறை நாட்கள் அல்ல.. தேசிய விடுமுறை நாட்கள் ஆகும். இந்த இரு நாட்களிலும் அரசு துறையில் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் கண்டிப்பான விடுமுறை நாட்கள் ஆகும். இந்த விடுமுறை புதன் மற்றும் வியாழக்கிழமை வருகிறது. ஆனால், 3ம் தேதி வெள்ளிக்கிழமை, அரசு வேலை நாளாக இருந்தது. அடுத்து 4ம்தேதி சனிக்கிழமை, 5ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, 3ம் தேதி விடுமுறை நாளாக அரசு அறிவித்தால், ஐந்து நாட்களுக்கு அரசு பணியில் உள்ளவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும் என்கிற நிலை இருந்தது.

பண்டிகையை முன்னிட்டு வெளியூர், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று அரசும், அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது.
இதனால் ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவித்துள்ளது, சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். இன்று பிற்பகலில் இருந்தே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையில் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்றபடி உள்ளன.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று வழக்கத்தை விட மிகமிக அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான ரயில்களில் எக்குத்தப்பான கூட்டம் இருந்தது. மக்கள் அடித்து பிடித்து ரயில்களில் ஏறுவதற்கு ஆர்வம் காட்டினார்கள். எப்படியாவது இடம் கிடைத்துவிடாதா என்று பரிதவித்தபடி பல தென் மாவட்ட மக்கள் நின்று கொண்டே இருந்தனர்.
ரயில்களில் கடுமையான கூட்ட நெரிசலுக்கு நடுவில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று பலரும் அடித்து பிடித்து ஏறினார்கள். அவர்களில் பலர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி ரயில்களில் சென்றார்கள். தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கிய போதும், கிளம்பிச் செல்லும் மக்களின் கூட்டத்திற்கு ஏதுவாக இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்த படியே இருந்தது.












Click it and Unblock the Notifications