திமுகவின் கோவை முப்பெரும் விழா தேதியில் திடீர் சேஞ்ச்.. நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, நாற்பது தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவருக்கு பாராட்டு விழா என கோவையில் நடைபெறவிருந்த முப்பெரும் விழாவின் தேதி மற்றும் இடமானது மாற்றப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா ஜூன் 14ஆம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்தது இந்த நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் முத்துசாமியும் நேரடியாக ஆய்வு செய்து ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா தேதி மற்றும் இடம் ஆனது மாற்றப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற "கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட"த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா - நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா - சீர்மிகு வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதல்வர், கட்சித் தலைவருக்குப் பாராட்டு விழா என "முப்பெரும் விழா" ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்" நடைபெறுகிறது.
திமுக தலைவரின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். கட்சியின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications