கொரோனாவை திமுக அரசு சரியாக கையாண்டுள்ளது.. பாராட்டிய அன்புமணி.. கையோடு வைத்த கோரிக்கை
சென்னை: கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டி உள்ளார்.
இன்று காலை பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர்.
அப்போது பேசிய ராமதாஸ், இந்த ஆண்டு ஆளுநர் அறிக்கையில் , வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மகிழ்ச்சியான விஷயம். இது நல்ல தொடக்கமாக இருக்கட்டும். இதற்கான நல்ல யோசனைகளை பாட்டா என்றார்.

அன்புமணி பாராட்டு
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும் போது, கொரோனா இரண்டாவது வேகமாக பரவ தேர்தல் தான் காரணம் என்றும், புதிய ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது என்றும் பாராட்டினார்.

அன்புமணி கோரிக்கை
வன்னியர் போராட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடான கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

வேலைவாய்ப்பு திட்டங்கள்
வேளாண் திட்டங்கள் குறித்து அன்புமணி கூறும் போது, தமிழகத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

அன்புமணி விமர்சனம்
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையை குறைகக மறுத்ததற்காக திமுகவை அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியிருந்தார். சாத்தியமில்லை என்று தெரிந்தே தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது முடியாது என்று கூறுவதாகவும், இதன் மூலம் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டதாகவும் விமர்சித்து இருந்தார். தற்போது கொரோனா விவகாரத்தில் அரசு சிறப்பாக கையாண்டதாக பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications