போயஸ் கார்டனில் கொடியேற்றாதே! ஜெ.தீபாவை தடுத்த ஜெ.தீபக்! மோதிக்கொள்ளும் ஜெயலலிதா அண்ணன் பிள்ளைகள்!
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான ஜெ.தீபக்கிற்கும், ஜெ.தீபாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த சண்டை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.
சுதந்திர தினமான இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்தில் கொடியேற்றச் சென்றிருக்கிறார் ஜெ.தீபா. இந்நிலையில் அவரை கொடியேற்றவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார் ஜெ.தீபக்.

அண்ணன் தங்கைக்கு இடையேயான சண்டை என்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாக இருந்து வரும் ஒன்று தான். அவ்வப்போது அடித்துக் கொள்வதும் பிறகு சேர்ந்து கொள்வதும் அவர்களின் வழக்கம் என்றாலும் போயஸ் கார்டனை உரிமைக் கொண்டாடுவதில் எழுந்துள்ள பஞ்சாயத்து மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இதனிடையே தனது சகோதரர் தன்னை போயஸ் கார்டனில் கொடியேற்றவிடாமல் இடையூறு செய்கிறார் என்றும் செய்தியாளர்களை அனுப்பி உதவும்படியும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் மெசேஜ் பதிவிட்டிருக்கிறார் ஜெ.தீபா. தீபக் சசிகலா பேச்சைக் கேட்டுக்கொண்டு செயல்படுகிறார் என்பது தீபாவின் முந்தைய குற்றச்சாட்டாகும்.
தீபாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அதற்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வைத்து நடத்தினார். அந்த நிகழ்விற்கு கூட தாய்மாமன் என்ற அடிப்படையில் ஜெ.தீபக் செல்லவில்லை. அத்தை சொத்திற்கு உரிமை கோருவதில் அண்ணன் தங்கைக்கு இடையே லடாய் நடப்பது அப்போதே தெரியவந்தாலும் இன்று பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications