உஷரா இருங்க மக்களே! 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! டிசம்பர் 9ஆம் தேதி வெளுத்து வாங்க போகும் அதிகனமழை
சென்னை : டிசம்பர் 9ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டிணம் ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மாலை 7.30 மணியளவில் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
தற்போது வங்க கடலில் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 770 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்கால் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 970 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

சூறாவளி புயல்
இதன் காரணமாக இந்த தாழ்வு மண்டலம் ஆனது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை சூறாவளி புயலாக மாறும் எனவும் அதனைத் தொடர்ந்து மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு
நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

ரெட் அலர்ட்
இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டிணம் ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

மழை நீடிக்கும்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 10ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை
கனமழை புயல் சின்னம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications