சவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம்.. தமிழக அரசுக்கு 3வது நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி கேள்வி
சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இது ஒருபுறம் எனில் இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, கடந்த மே 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தன் மகன் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்த செய்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை கோடை விடுமுறை கால நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர், நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்புகளை பிறப்பித்தார்கள். அதில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பு தந்தார். நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த வழக்கிற்கு காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். தற்போதுள்ள நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு அளித்தார்.
இதனால், எது சரியான தீர்ப்பு என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று விசாரித்தார்.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சவுக்கு சங்கர் வழக்கில் பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும், என்று நீதிபதி ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தார. அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் ஏற்கெனவே இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஏன் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications