ஜாலிதான்.. ரெயின்கோட், குடை ரெடியா வச்சுக்கங்க! இந்த 17 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் கனமழை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 23 ஆகிய தேதிகளில் வடதமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் PWD (திருப்பூர்) 8, கடம்பூர் (தூத்துக்குடி) 7, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 6, ஏத்தாப்பூர் (சேலம்), ஏற்காடு (சேலம்), திருச்சி டவுன் (திருச்சி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) தலா 5, கிருஷ்ணராயபுரம் (கரூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 4 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 21 முதல் 23ஆம் தேதி வரை கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications