மாஸ் "ஆபரேஷன்".. ஆந்திராவில் கஞ்சா வயலை ஒழிக்க ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு.. 6,000 ஏக்கர் அழிப்பு!
சென்னை: ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 6,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா செடியை அம்மாநில அரசு சமீபத்தில் அழித்தொழித்தது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காவல்துறைதான் காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை, மாநிலத்தில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க ஆபரேஷன் கஞ்சா வேட்டையே கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறது.

கஞ்சா வேட்டை
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக கஞ்சா பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இது இளைஞர்கள் மட்டுமல்லாது மாணவர்களையும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளது. இது குறித்த புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை 'ஆபரேஷன் கஞ்சா 2.0' எனும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் காரணமாக கஞ்சா விற்பனையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஏப்ரல் வரை சுமார் 8,929 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2,500 கி.கி வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நீடித்து வந்தது. எனவே இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர தடுப்புப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் போதையை தவிர்ப்போம், போதையை ஒழிப்போம் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் கஞ்சா செடி ஒழிப்புக்கு தமிழ்நாடு காவல்துறைதான் காரணம்" என்று கூறியுள்ளார்.

ஆபரேஷன் பர்வதன்
அவர் பேசியதாவது, "ஆந்திரப் பிரதேசத்தில் கஞ்சாவை ஒழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து 'ஆபரேஷன் பர்வதன்' எனும் திட்டம் மூலம் 6,416 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அம்மாநில காவல்துறையினர் அழித்தொழித்தனர். கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதியில் தொடங்கப்பட்ட இந்த பணி 36 நாட்கள் வரை தொடர்ந்து நீடித்தது" என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஆந்திரப் பிரதேச அரசின் இந்த அதிரடி முடிவினால் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான கஞ்சா அழித்தொழிக்கப்பட்டது." என்று கூறினார்.

தமிழ்நாடு காவல்துறை
தொடர்ந்து பேசிய அவர் "இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ஏடிஜிபி(க்ரைம்) காரணமாக இருந்துள்ளார்" என்று கூறியுள்ளார். பொதுவாக தமிழ்நாட்டிற்கு கஞ்சா உள்ளூரிலேயே கிடைக்கிறது என்றாலும், அதிக அளவு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே காவல்துறையானது கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications