தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது.. டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா பெயர் மேலானது - வைரமுத்து
சென்னை: டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தைவிடத் தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது என்றும் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி, தற்போது 101 வயதில் வாழும் வரலாறாகத் திகழும் சங்கரய்யாவுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்திருக்கிறது. ஆனாலும், அதற்கான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவருகிறார். இதனால், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் ஆளுநர் ரவிக்கு கண்டங்கள் தெரிவித்துவருகின்றனர்.

சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் மறுத்திருக்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநரின் செயலைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார் பொன்முடி.
இந்த நிலையில் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்காதது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும் பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
"டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது
இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்
பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது
கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய் சிவக்கப் போகிறது?" என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications