கஜா போன்ற புயல் வந்தால்.. தாங்குமா சென்னை.. சந்தேகம்தான்!
அடுத்தடுத்து புயல் வந்தால் சென்னை அதனை சமாளிக்குமா என தெரியவில்லை.
Recommended Video
சென்னை: கஜாவிலிருந்து சென்னை தப்பி விட்டாலும், வருங்காலத்தில் இதுபோன்ற தீவிரப் புயல் வந்தால் சென்னை தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திலிருந்தே சென்னை தப்ப முடியாமல் தவித்துப் போய் விட்டது. இந்த நிலையில் பெரும் புயல்கள் வந்தால் நிச்சயம் மிகப் பெரிய சிரமத்தையே சந்திக்க நேரிடும். காரணம், எந்தவிதமான பாடத்தையும் நாம் கற்றதாக தெரியவில்லை.
தமிழகத்தில் கஜாவின் பாதிப்பே இன்னும் ஓயவில்லை. 49 பேரை காவு வாங்கியதுடன், பாதி தமிழகத்தையே சூறையாடிச் சென்றுவிட்டது. பெரும்பாலான மாவட்டங்கள் 2 நாட்களாக கரண்ட் இல்லாமல் தவித்து வருகிறார்கள். சில மாவட்டங்களில் கரண்ட் வர ஒருவாரம் கூட ஆகும் என்று சொல்லப்படுகிறது.
[போச்சு, என் தென்னையெல்லாம் போச்சு.. ஒரு விவசாயியின் கண்ணீர் கதறல்.. வீடியோ]
சுற்றுலா பயணிகள்
ஏக்கர் கணக்கில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. குடிசைகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு, முகாம்களில் நம் மக்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் வெளியூர் போனவர்களும், சுற்றுலா பயணிகளும் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளிலேயே தவித்து வருகின்றனர்.
இன்னொரு புயல்?
இதில் இன்னொரு புயல் உருவாகப் போகிறது என்று வானிலை மையம் முன்கூட்டியே கூறியுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சொல்லப்பட்டது. இது நாளை மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் என்பதால் கண்டிப்பாக சென்னைக்கு பலத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
மெரினாவில் பலத்த காற்று
கஜாவிலிருந்து சென்னை தப்பியது என்று நினைத்தால், தற்போது அடுத்த 2 நாட்களுக்குள் என்னாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாகை பக்கமாக வீசிய கஜாவுக்கே, சென்னையில் குறைந்த அளவே மழை பெய்தாலும், மெரீனா கடற்கரையில் பலத்த காற்று வீசியது.
பலத்த மழை
கொஞ்சம் மழை வந்தாலே சென்னை தாங்காது... இதில் பலத்தமழை என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தற்போதே இறங்கிவிட்டது. கண்டிப்பாக 18 மற்றும் 19-ம் தேதிகளில் பலத்த மழை இருக்கும் என்பதால் சென்னைவாசிகள் பீதியில் உள்ளனர். ஆனால் ஒரே ஆறுதல்... பலத்த மட்டும்தானாம்.. புயலாக மாற வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
பயம்தான் வருகிறது
2015 சம்பவத்திற்குப் பிறகாவது ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியாளர்களும், நிர்வாகமும் தீவிர அக்கறை காட்டி செயல்பட்டிருக்க வேண்டாமா. ஆனால் உருப்படியாக எதுவும் செய்தது போல தெரியவில்லை. இன்னும் கூட ஆக்கிரமிப்புகள் அப்படியேதான் உள்ளன. எந்தக் கால்வாயும், ஏரியும் மீட்கப்படவில்லை. எல்லாமே அபாயகரமான அளவில்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவேதான் மக்களுக்குப் பயம் உருவாகிறது, மழை வரும்போதெல்லாம்.