வாங்க விசிட் அடிக்கலாம்.. பிளான் போட்ட எடப்பாடி.. "வெள்ளமே இல்லையாம்".. தேடி பார்த்த மாஜிக்கு ஷாக்!
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கனமழையின் போது சென்னையில் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரு வாரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வரும் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழ்நாடு நோக்கி நகரும்.

மழை
தற்போது குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது பின்னர் வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான 48 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். முன்னதாக சென்னையில் தினமும் 10 செமீ அளவிற்கு கூட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளம் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்காமல் வடிந்தது.

கனமழை
இந்த கனமழைக்கு பின்பாக சென்னையில் பல இடங்களில் காலையில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் என்றே மக்கள் பலரும் எதிர்பார்த்தனர். முக்கியமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்படவில்லை. கடந்த 4-5 மாதங்களாக கட்டப்பட்டு வந்த கழிவு நீர் கால்வாய்கள்தான் இதற்கு காரணம். வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வந்தன.

வெள்ளநீர் வடிகால்
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் வடிகால் வசதி காரணமாக தண்ணீர் வேகமாக வெளியேறி உள்ளது. பிரதான சாலைகள் எதிலும் வெள்ளம் தேங்கவில்லை. ஆனால் சில உள் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இங்கு கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. சில சிறிய உள் சாலைகளில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இங்கும் மோட்டார் வைத்து தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இந்த மழை வெள்ளம் எதையும் பார்வையிட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை.

சென்னை நீரில் மிதக்கும்
இந்த விவகாரம் பற்றி சென்னையே நீரில் மிதப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்தார். ஆனால் அவர் அறிக்கை வெளியிட்டதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவர் சேலத்தில்தான் இருக்கிறார். முக்கியயமாக அவர் சென்னைக்கே வரவில்லை. சென்னை பக்கமே வராமல் சென்னையில் நீர் இருப்பதாக அவர் பேசி உள்ளார். அவர் சென்னை வராததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.

சரியில்லை
அவர் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை, மழை காரணமாக பயணம் மேற்கொள்வதில் சிக்கல், சேலத்தில் சில மீட்டிங்குகள் இருக்கின்றன என்றெல்லாம் அவருக்கு நெருக்கமான தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அதிமுகவில் சிலரிடம் விசாரித்ததில், சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட எடப்பாடியும் மாஜி அமைச்சர் ஒருவரும் திட்டமிட்டுள்ளனர். அந்த மாஜி அமைச்சரின் ஐடியாபடி இவர்கள் சென்னையில் விசிட் அடிக்க நினைத்து உள்ளனர்.

மாஜி அமைச்சர்
இதையடுத்து அந்த மாஜி அதிமுக அமைச்சர் நிர்வாகி ஒருவரை சென்னையில் சுற்றி தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கே சிக்கி உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்று கூறி இருக்கிறார். அந்த நிர்வாகியும் தண்ணீர் அதிகம் உள்ள இடங்களை தேடி உள்ளார். ஆனால் பெரிதாக அப்படி இடங்கள் எதுவும் இல்லை. தண்ணீர் தேங்கி இருந்த ஒரு சில இடங்களிலும் அமைச்சர்கள் நேரில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வந்துள்ளனர்.

நிர்வாகி இல்லை
அமைச்சர்கள் இருக்கும் போது அந்த இடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் செல்வது சரியாக இருக்காது. இதனால் கடைசி கட்டத்தில் சென்னையில் ஆய்வு செய்வதை நிறுத்தி உள்ளனர். மழை தீவிரமாகி வெள்ளம் வந்தால் சொல்லுங்கள். பார்வையிடலாம், இப்போது போய் பார்வையிட்டால் சரியாக இருக்காது என்று எடப்பாடி அந்த மாஜி அமைச்சரிடம் சொல்லி இருக்கிறாராம். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மழையின் போது சென்னையில் மக்களை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications