சேது கால்வாய் வந்தால்.. சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி மாறிவிடும்: பாமக ஜி.கே.மணி
சென்னை: சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்று பேசிய அவர், சேது சமுத்திர திட்டம் மட்டும் வருமேயானால் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வளர்ச்சி அடையக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தின் மூலம் போக்குவரத்து நேரம் 30 மணி நேரம் வரை குறையும் என்றும் ஒரு பெரிய திட்டம் வரும் போது தொலைநோக்கு பார்வை அவசியம் எனவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.

சேது சமுத்திரம்
தமிழக சட்டசபையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்று பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை இந்திய திருநாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் மிகப் பெரிய திட்டம் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் கடலோர காவல்படைகள் பலப்படுத்தப்பட்டு இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட சேது சமுத்திர திட்டம் வழிவகுப்பதாக தெரிவித்தார்.

ஏற்க வேண்டும்
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஜி.கே.மணி, இந்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சட்டசபையிலேயே வேண்டுகோளும் விடுத்தார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசும், முதலமைச்சரும் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி பக்கபலமாக நின்று ஆதரவளிக்கும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு இணையாக
மேலும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என அவர் பேசியதோடு தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வளர்ச்சி அடையக் கூடும் எனவும் கூறினார். 167 கிலோ மீட்டர் தொலைவுக்கு 12 மீட்டர் ஆழம், 300 மீட்டர் அகலம் என்ற அளவில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் போது பவளப்பாறைகள் அழிப்பு உள்ளிட்ட சில பாதகங்கள் இருந்தாலும் தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டத்தை அனுக வேண்டும் எனக் கூறினார்.

மொத்தத்தில் ஆதரவு
மொத்தத்தில் முதல்வர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாமக ஆதரவாக நிற்கும் எனக் கூறிவிட்டு அமர்ந்தார். இவரைப் போலவே விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் ஷாநவாசும், சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்று பேசினார்.












Click it and Unblock the Notifications