சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக மசோதா உள்ளதாக தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் எதிராக மசோதாவையும் முதல் முறை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பிய மசோதாவிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்தது.
அதுபோக சுமார் 10 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நிலுவையில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவு கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தை தவிர, பிற அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருப்பார் என்றும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில், சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக மசோதா உள்ளதாக தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 48 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் 3 சட்ட மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications