சாலைகளில் பள்ளங்கள்.. ஒவ்வொரு காண்டிராக்டர்களுக்கும் பறக்கும் எச்சரிக்கை கடிதம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபரில் ஆரம்பிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிதாக சாலைகளை தோண்டும் புதிய பணிகளுக்கு அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதேபோல் ஏற்கனவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை 31-ம் தேதிக்குள் மூடி விட வேண்டும் என்று தமிழக அரசு கறாராக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு காண்டிராக்டர்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாமல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவை கலங்கவைத்தது. ஆனால் அதற்கு எதிர்மாறாக தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்தது. இந்த ஆண்டு அப்படி இல்லை.. தென்மேற்கு பருவமழையால் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்திருக்கிறது. கேரளாவில் கொட்டிய பேய் மழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 450க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை என்பது கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் தான் அதிகமாக பெய்யும்.

அதேநேரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் தான் அதிகளவில் பெய்யும். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலம் என்பது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும்.
கடந்த ஆண்டு ( வடக்கிழக்கு பருவமழையால் சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம் கோவை, நீலகிரி, தேனி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இயல்பான அளவிலும், சில இடங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்தது. சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளபாதிப்புக்கு முக்கிய காரணம் தொடர்ந்து பல மணி நேரம் பெய்த கனமழை தான். இந்த கனமழையால் உருவான வெள்ள நீர் சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் எல்லாம் வீடுகளுக்கு கீழ் காட்டாற்று வெள்ளமே ஓடியது.
தடுத்த அத்தனை தடுப்பு சுவர்களையும் உடைத்துக்கொண்டு சென்றது. பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், வேளச்சரி உள்ளிட்ட தென்சென்னை பகுதியில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. இயல்புநிலை திரும்ப இரண்டு வாரம் வரை ஆனது. மின்சாரம் மீண்டும் வழங்கவே ஒரு வாரம் வரை ஆனது. வருடாவருடம் சென்னையை பொறுத்தவரை மழையால் தான் கண்டம் என்று சொல்லும் அளவிற்கு பெய்துவிடுகிறது. எனவே முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இந்தாண்டு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக கலெக்டர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே தமிழக அரசு, பருவமழை முன்னெச்சரிக்கையாக தோண்டப்பட்ட சாலைகளை வருகிற 31-ம் தேதிக்குள் மூடி விட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பருவமழை காலத்தில் புதிய பணிகள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றில் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடும் பணி தொடங்கி உள்ளதாம். மேலும் குடிநீர் குழாய் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். அதேபோல் பருவமழை காலத்தில் புதிய சாலைகள் அமைக்க வேண்டாம் என்றும் நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
சென்னையை பொறுத்தவரை சென்னை குடிநீர் வடிகால் வாரியம், அனைத்து காண்டிராக்டர்களுக்கும் இது தொடர்பான கூட்டம் நடத்தி அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக சொல்கிறார்கள். சென்னையில் தோண்டப்பட்ட சாலைகளை 31-ம் தேதிக்குள் கட்டாயம் மூட வேண்டும் என்று அறிவுறுத்தி, ஒவ்வொரு காண்டிராக்டர்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பும் பணி நடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications