பாஜகவிற்கு பயம்.. பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை.. முதல்வர் ஸ்டாலின் சுளீர் பதிவு
சென்னை: எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக தெளிவாக பயப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். மேலும், ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிராக அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகள் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பது தெரிகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பா.ஜ.க தெளிவாக பயப்படுகிறது. அவர்கள் தங்கள் சூனிய வேட்டையை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications