தியாகம் என்ற வார்த்தைக்கே மரியாதை இல்ல.. ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் தியாகியா? எடப்பாடி ஆவேசம்!
சென்னை: தியாகம் என்ற சொல்லுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. ஊழல் செய்து அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவரை சிறையில் இருந்து வெளியே வருபோது, அதனை தியாகம் என முதல்வரே சொல்வது வெட்கக்கேடு என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, நேற்று முன்தினம் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதனை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்வீட்டில் உன் தியாகம் பெரிது, உன் உறுதி அதனினும் பெரிது என்று தெரிவித்துள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஊழல் செய்து அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவரை சிறையில் இருந்து வெளியே வருபோது, அதனை தியாகம் என முதல்வரே சொல்வது அதற்கு உண்டான மரியாதையை கெடுப்பது போலாகிறது.
நாடு சுதந்திரம் பெறுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் நீத்தவருக்கு தான் தியாகம் என்ற சொல் பொருந்தும். அப்படிப்பட்ட சொல்லை செந்தில் பாலாஜிக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது" என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் கொலை நடந்துகொண்டே உள்ளது. தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம். பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. 20 நாட்களில் மட்டும் 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்காக திமுக அரசைக் கண்டித்து சென்னையில் பிரமாண்டமான ஆர்பாட்டம் நடத்தினோம். ஆனாலும், ஆட்சியாளர்கள் விழித்துக்கொள்ளாமல் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறியது கண்டனத்திற்கு உரியது. காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அப்போதுதான் குற்றச் செயல்கள் குறையும்.
தமிழகம் போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக காட்சியளிக்கிறது. போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நான் தெரிவித்தேன். ஆனால், அரசின் செயல்பாடுகள் மிகவும் மெத்தனமாக உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் என பொது இடங்களுக்கு அருகில் போதைப் பொருள் நடமாட்டம் மிகவும் அமோகமாக நடைபெறுகிறது.
போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவது மட்டுமே டன் கணக்கில் என்றால், அரசால் கண்டுபிடிக்க முடியாமல் விற்பனை செய்யப்படுவது எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள். அரசு இனியாவது வேகமாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கை சீரழிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கடந்த 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!' என்று தெரிவித்திருந்தார். அதனைத்தான் கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications