தேனி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தேனி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை, கேரளாவில் தாமதமாக சனிக்கிழமையன்று தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் தலா ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.
ஒரு தாயின் இறுதி குரலாக இருக்கட்டும்.. ஜிவி பிரகாஷ் பதிவிட்ட ஆறுதல் பதிவு
கொடைக்கானலில், 3 மணி நேரங்களுக்கு மேலாக பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள நட்சத்திர ஏரி நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சுற்றுலா பயணிகள் மாலை முதல் அறைகளிலேயே முடங்கினர்.
இந்தநிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வாயு புயலாக மாறியுள்ளது. குஜராத் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தனுஷ்கோடி முதல் குளச்சல் வரை கடல் சீற்றமாக காணப்படும் என ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடல் அலைகள் 3.5 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை எழும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் அறிவுரை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீரோடி, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை போன்ற மீனவ கிராமங்களுக்கு கடல்நீர் புகுந்தது. நீரோடி துறையில் மீன்பிடிதளம் இடிந்து வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.