தினகரன் தரப்புக்கு இரண்டல்ல, மூன்று வாய்ப்புகள் உள்ளன.. வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அடுத்த கட்டமாக டிடிவி தினகரன் தரப்பினருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று, உயர்நீதிமன்றத்தின், மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார்.
18 பேரையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதையடுத்து தினகரன் தரப்பு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்வார்களா அல்லது இடைத் தேர்தலை எதிர் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மூன்றாவது ஒரு வாய்ப்பும் கூட இருக்கிறது என்கிறார் ராஜா செந்தூர் பாண்டியன்.

ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ராஜா சுந்தரபாண்டியன். அப்போது அவர் கூறியதாவது உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தது.

வாதிட்டது இப்படி
இந்த இருவரின் தீர்ப்பில் யார் கூறியது சரி என்பதை ஆய்வு செய்வதற்காகவே மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். எங்களுக்கும் கூட அவ்வாறுதான் வாதத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நாங்கள் வாதிட்டோம். எதிர் தரப்பு வழக்கறிஞர்களும் கூட அந்த வரைமுறைக்குள் நின்றபடிதான் வாதத்தை முன்வைத்தனர்.

நீதிபதி விருப்பம்
ஆனால் நீதிபதி சத்யநாராயணன் இன்று தீர்ப்பு வழங்கிய போது முந்தைய இரு நீதிபதிகளின் தீர்ப்புகளை ஆராய்ந்து தீர்ப்பளிக்காமல், வாதத்தின் அடிப்படையில்தான், இந்த தீர்ப்பை வழங்குவதாக தீர்ப்பின்போது குறிப்பிட்டார். இது முன்பே தெரிந்திருந்தால் அதற்கு ஏற்ப வாதிட்டு இருப்போம்.
18 எம்எல்ஏக்களும் தினகரன் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு உள்ளதால், நானும் அவ்வாறு குறிப்பிடுகிறேன். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு இப்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன.

3 வாய்ப்புகள்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம், அல்லது தேர்தலை சந்திக்கலாம். இதுகுறித்து, 18 பேரும் தான் முடிவு செய்ய முடியும். அவர்கள் என்ன கூறுகிறார்கள் அதற்கேற்ப சட்டக்குழுவின் நடவடிக்கை இருக்கும். இது தவிர மூன்றாவது ஒரு வாய்ப்பும் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொண்டே தேர்தலையும் சந்திக்க முடியும். எல்லாவற்றையும், ஆராய்ந்து 18 பேரும் முடிவை அறிவிக்க இருக்கிறார்கள். இவ்வாறு ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

தேர்தலை சந்திக்க வாய்ப்பு
மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்காமல் அந்த வழக்கு நடந்தால், இடைத்தேர்தலையும் சந்திக்க 18 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள். ஒருவேளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துவிட்டு, வழக்கை விசாரித்தால், தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மூன்றாவது வாய்ப்பு எப்படி வேண்டுமானாலும் செல்லக் கூடியது என்பதால், தேர்தலை சந்திப்பதையே, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விரும்புவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications