விஜயபிரபாகரன் வைத்த கோரிக்கை.. விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்
சென்னை: விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி வேட்பாளர்கள், சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த ஓட்டு எண்ணிக்கையின்போது விருதுநகர் லோக்சபா தொகுதியில் கடும் போட்டி நிலவியது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக மீண்டும் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருந்தார். பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் களமிறங்கி இருந்தார்.
இதில் தொடக்கம் முதலிலேயே காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் அவர்கள் 2 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று 4,379 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூரிடம் தோற்றுப்போனார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா 1,66,271 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு விஜயபிரபாகரனின் தாயும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரருமான பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் ‛‛விருதுநகரில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்தது. சூழ்ச்சி செய்து விஜயபிரபாகனை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காக அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டர் பிரஷர் தாங்க முடியாமல் செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்யும் வகையில் தவறு நடந்துள்ளது. இதனால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என்று கூறினார்.
அதேபோல, அதோடு தேமுதிக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள் ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட முடியாது. தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications