''என்னையும் தான் கைது செய்தார்கள்.. அதற்காக பயத்தில் சிறுநீர் கழித்தேனா?''! ஜெயக்குமார் கிண்டல்!
சென்னை: தன்னையும் தான் காவல்துறையினர் கைது செய்தார்கள் என்றும் அதற்காக தாம் அழுது புரளவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக நான் என்ன சிறுநீர் கழித்தேனா என வினவி செந்தில்பாலாஜியை கிண்டல் அடித்தார்.
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பேண்டிலேயே சிறுநீர் கழித்தார் என கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியிருந்தார். அதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட அதிமுகவினர் அதனை வைத்தே செந்தில்பாலாஜியை கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
கைது, வழக்கு என எதைப்பற்றியும் கவலைப்படாத இயக்கம் அதிமுக என்றும் வழக்கைக் காட்டி பயம் காட்டலாம் என நினைத்தால் அது நடக்காது எனவும் பேசினார். ஜெயக்குமார் இந்தப் பேச்சு பாஜகவுக்கும் சூசகமாக தெரிவிக்கப்பட்ட மெசேஜாக பார்க்கப்படுகிறது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தொட்டுப்பார், மோதிப்பார் என பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதல்ல எனக் கூறிய ஜெயக்குமார் முதல்வர் பேசுவதை பார்த்தால் ஜல்லிக்கட்டு கமென்ட்ரி கொடுப்பவரை போல் இருப்பதாக விமர்சித்தார். 1996 -2001 திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவை கைது செய்ய போலீஸார் போயஸ் கார்டன் சென்ற போது கைது செய்ய வந்த போலீஸ்காரர்களுக்கு டீ கொடுத்து உபசரித்தவர் ஜெயலலிதா என பழைய நிகழ்வுகளை நினைவூட்டினார்.
செந்தில்பாலாஜி வாய் திறந்து பேசினால் டாப் டூ பாட்டம் எல்லோரும் மாட்டிக்கொள்வார்கள் என்றும் இதன் காரணமாகவே அவரை ஸ்டாலின் அமைச்சரவையிலிருந்து நீக்காமல் வைத்திருக்கிறார் என ஜெயக்குமார் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications