பாமக யாருடன் கூட்டணி? முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு கூட இல்லையா? திரியை கொளுத்தும் திலகபாமா!
சென்னை: பாமக யாருடன் கூட்டணி என்ற முடிவை ராமதாஸ் கூட தன்னிச்சையாக எடுக்கமாட்டார் என்றும் கட்சியின் பொதுக்குழுவில் தான் இது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் திலகபாமா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்றும் திமுக, அதிமுக மட்டும் தான் இங்கு பெரிய கட்சிகளா எனவும் வினவினார். பாமகவை எந்த கட்சி விரும்பி அழைக்கிறதோ, பாமக கொள்கைகளை எந்தக் கட்சி ஆதரிக்கிறதோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமையலாம் எனவும் தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்ததில் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் திலகபாமா பாமக வேட்பாளராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.பாமக பொருளாளர் திலகபாமாவை பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்டு கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாமகவின் தென் மண்டல முகமாக திலகபாமா அறியப்படும் வேளையில் கூட்டணி தொடர்பாக ராமதாஸ் கூட தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதை போல் ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.
இதனிடையே தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை கிராமப்புற மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்த திலகபாமா, இதற்காக பாமக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய திலகபாமா, கூட்டணிக்காக கர்நாடகவுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் காவிரி நீருக்காக ஏன் செல்லவில்லை என வினவினார்.
வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் தமிழ்நாட்டில் அதிகம் வெட்டப்படுவதாகவும் இதனை பாமக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என வினவிய பாமக பொருளாளர் திலகபாமா, சமூநீதிக் கட்சி என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது தானே என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications