தவிர்க்கவே முடியாது.. மாநாட்டிற்கு வாங்க சார்.. விஜய்யை அழைக்கும் திருமா.. இது பெரிய ஏற்பாடா இருக்கே?
சென்னை: வைகோ பாணியில் தனது நிகழ்ச்சிக்கு முதல்வர் விஜய்யை அழைக்கவிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அண்மையில் வைகோவை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம், முதல்வரை நான் சந்திக்க வேண்டும்; ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணித்தாருங்களேன்'' என்றார் வைகோ.
அதன்படி அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணப்பட, தலைமைச் செயலகத்தில் விஜய்யை சந்தித்தார் வைகோ. அந்த சந்திப்பின் போது, ''தவெக கூட்டணிக்கு நீங்கள் வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன்'' என்று சொல்லியுள்ளார் விஜய். அதற்கு, ''கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளேன். அதில் விவாதிக்கிறேன்'' என்று சொன்ன வைகோ, ''எனது நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியிட திட்டமிட்டுள்ளேன். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. துணை ஜனாதிபதிதான் வெளியிடுகிறார்.

அந்த நூலின் முதல் பிரதியை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கோரிக்கை வைக்க, ''நூல் வெளியீட்டு விழாவை எங்கு வைத்திருக்கிறீர்கள்? சென்னையிலா? எப்போது நடக்கிறது?'' என்று விஜய் கேட்டுள்ளார். அப்போது வைகோ, '' வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் தான். சென்னையில் வைக்க முடியவில்லை. டெல்லியில் வைத்திருக்கிறேன். நீங்கள் அவசியம் வரவேண்டும்'' என்று சொல்ல, அதற்கு சம்மதித்துள்ளார் முதல்வர் விஜய். வைகோவின் நூலின் முதல் பிரதியை விஜய் பெற்றுக்கொள்ள சம்மதித்திருப்பதால், மதிமுகவின் பொதுக்குழுவில், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள் மதிமுகவினர்.
தனது நிகழ்ச்சிக்கு விஜய்யை வைகோ அழைத்திருக்கும் நிலையில், அதே பாணியை நாமும் ஒரு முயற்சியில் இறங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம் விசிக தலைவர் திருமா. அதாவது, ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி திருமாவளவனின் பிறந்த நாள். இந்த நாளை ஒவ்வொரு வருடமும், தமிழர் எழுச்சி நாளாக விசிக கொண்டாடிவருகின்றனர். இந்த வருடம் , திருமாவின் பிறந்த நாளை, தமிழ் தேசிய எழுச்சி மாநாடாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததுடன், விஜய்யின் அமைச்சரவையிலும் விசிக பங்கெடுத்துள்ள நிலையில் வருகிற முதல் பிறந்த நாள் என்பதால், தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை பிரமாண்டப்படுத்த திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில், இந்த மாநாட்டிற்கு முதல்வர் விஜய்யை அழைக்க வேண்டும் என விருப்பப்படுகிறார் திருமா. இதைப்பற்றி கட்சியின் சீனியர்களிடம் அவர் விவாதிக்க, ''விஜய்யை வைத்து தனது புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார் வைகோ. இந்த விழா டெல்லியில் நடப்பதால், தேசிய அளவில் வைகோவும் விஜய்யும் கவனம் ஈர்ப்பார்கள். அதே பாணியில், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு விஜய்யை அழைக்கலாம். அவர் வருவதன் மூலம் மேடையில் நீங்களும் முதல்வரும் ஒரு சேர கைகளை உயர்த்தும் போது, அது தமிழகத்திற்கும் டெல்லிக்கும் ஒரு மெசேஜ்ஜை சொல்வது போலிருக்கும் என சொல்லியுள்ளனர் மூத்த நிர்வாகிகள்.
இதனை உள்வாங்கிக்கொண்டுள்ள திருமா, விரைவில் விஜய்யை சந்தித்து மாநாட்டுக்கு அழைப்புவிடுப்பார் என்கிறார்கள் விசிகவினர். ஆனால், தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி நாங்கள் தான். விசிக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சமீபகாலமாக திருமா சொல்லி வருவதை விஜய் உள்பட அவரது ஆலோசகர்கள் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற அவரது பேச்சு, நம்மை நோக்கி சொல்லப்பட்டதா? அல்லது பொதுவான கருத்தாக சொல்லப்பட்டதா? பொதுவாக சொல்ல வாய்ப்பில்லை; அதற்கான அரசியல் சூழலும் தற்போது இல்லை. பிறகேன் அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்? என்று ஆலோசகர்கள் அலசிக்கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த நூல் வெளியீட்டு விழாவின் மேடையை திருமாவும் விஜய்யும் பகிர்ந்துகொள்வதாக இருந்தது. திமுகவின் தலையீட்டில் திருமா அந்த விழாவை புறக்கணித்தார். தற்போது விசிக ஏற்பாட்டில் நடக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் விஜய் கலந்துகொள்ளும் பட்சத்தில், விஜய்யும் திருமாவும் ஒரே மேடையில் நிற்பதன் மூலம் திமுக தலைமைக்கு ஒரு செய்தியை சொல்வதாக அமையும் என்பதாகவும் விசிக தரப்பில் பேசப்படுகிறது. இருவரும் ஒரே மேடையில் தோன்றினால், அந்த மாநாட்டில் பேசும் ஆதவ் அர்ஜுனா, தனது புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவை கலந்துகொள்ள விடாமல் திமுக தடை போட்ட விவகாரத்தை பரபரப்பாகப் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications