“தவெக RSSன் பிள்ளைகள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை..” ஆதரவு கொடுத்த கையோடு அட்டாக் மோடில் திருமா
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது தவெக ஆட்சி அமைக்க விசிக சரியான நேரத்தில் ஆதரவு கொடுத்துள்ளது. அதேநேரம் ஆதரவு கொடுத்த மறுநொடியே தவெக என்பது ஆர்எஸ்எஸ்- பாஜகவின் பிள்ளைகள் தான் என்றும் தங்களது விமர்சனங்களை திரும்ப பெறவில்லை என்று திட்டவட்டமாக சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் திருமாவளவன்!
தமிழ்நாட்டில் கடந்த 6 நாட்களாக யார் ஆட்சியை அமைப்பார் என்பதில் குழப்பம் இருந்தது. விஜய் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அவரால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இந்தச் சூழலில் தான் தவெகவுக்கு விசிகவும் ஐயுஎம்எல் கட்சியும் ஆதரவு கொடுத்தது. இதன் மூலம் விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. நாளை பிற்பகல் 3.15 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்கிறார்.

திருமாவளவன்
இதற்கிடையே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் மீதான கருத்துகளை மாற்றிக் கொள்ள போவதில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இதன் பின்னணி எனக்கு என்னவென்று தெரியாது.. ஆனால், டிடிவி தினகரன் தன்னுடைய சட்டசபை உறுப்பினர் தானாகச் சென்று இருந்து ஆதரவு கொடுக்கவில்லை என்ற புகாரை கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
விமர்சனம் தொடரும்!
பிரச்சாரம் சமயத்தில் தவெகவை ஆர்எஸ்எஸ்- பாஜகவின் பிள்ளைகள் என விமர்சித்துவிட்டு இப்போது கூட்டணி அமைப்பது சரியா என்ற கேள்விக்கு அவர், "இது ஒரு குழப்பமான சூழல். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். இதில் கண்டிஷன்கள் எதுவும் இல்லை. எந்தவொரு பேரமும் பேசவில்லை. அவருடைய பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த முயற்சி நாங்கள் எடுக்கவில்லை. இடதுசாரிகள் எங்களுக்கு முன்பு எடுத்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் நாங்கள் எங்கள் முடிவை எடுத்தோம். இடதுசாரிகள் உடன் இணைந்தே முடிவெடுப்போம் என்று தான் முன்பே கூறியிருந்தேன்.
நாங்கள் திமுக தலைமையிலேயே தேர்தலை சந்தித்தோம். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே எங்கள் பிரச்சாரம். எங்கள் பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் எங்கள் அணிக்கு 1.5 கோடிக்கு மேலான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள்.. அதுவும் கணிசமான வாக்குகள் தான். அது தவெகவுக்கு எதிரான வாக்குகள்தான்.. அதே போல அதிமுகவுக்கு போன ஒரு கோடி வாக்குகளும் தவெகவுக்கு எதிரானது தான். இப்படி தவெகவுக்கு எதிராக திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு வந்த வாக்குகள் 60 சதவிதத்திற்கு மேலானது.
காரணம் என்ன!
ஆனாலும் கூட 108 இடங்களில் வென்ற நிலையில், அவர்களுக்கு இன்னும் 10 இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளது. இதனால் விஜய் ஆட்சி அமைப்பதற்கு திணறி கொண்டு இருக்கிறார். அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி வரும். ஜனாதிபதி ஆட்சி என்பது கிட்டத்தட்ட பாஜக ஆட்சி தான். தமிழ்நாட்டில் அப்படியொரு நிலை வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.. அந்த அடிப்படையில்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதேநேரம் அவர்கள் மீது நாங்கள் வைத்த விமர்சனத்தை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. அந்தக் கருத்துக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
ஆதரவு மட்டுமே
நாங்கள் இப்போதைக்கு ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளோம்.. ஆட்சி நடத்தவோ அல்லது அவர்களோடு சேர்ந்து நாங்கள் கூடி பயணிப்போம் என்றோ உறவாடுவோம் என்றோ நான் சொல்லவில்லை. மீண்டும் சொல்கிறேன் அவர்கள் மீதான விமர்சனமும் அவர்களைப் பற்றிய மதிப்பீடும் தனி! அவர்கள் ஒரு நெருக்கடியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் பாஜக இங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவந்துவிடும். அதை தடுக்கவே நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்" என்றார்.













Click it and Unblock the Notifications