“ரசிகர் பட்டாளத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிட முடியாது..” விஜய் குறித்து திருமாவளவன் பேச்சு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார். இந்த மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்த நிலையில், ரசிகர் பட்டாளத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிட முடியாது என திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், "ஓரிடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது, திரைப்படத்தில் புகழ் பெற்ற, செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களுக்கு இயல்பான ஒன்றுதான். ஆந்திராவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் அதைப்போல தமிழகத்தில் பல தலைவர்கள் இன்றைக்கு நாம் விஜயகாந்த் உட்பட விஜய் வரையிலும் பார்க்கிறோம். ஆனால் அவர்களால் கடைசி வரை தாக்குபிடித்து நிற்க முடிகிறதா? என்கிற கேள்வி எழுகிறது.

ரசிக பட்டாளம் என்பது வேறு, அரசியல் விழிப்புணர்வு பெற்ற களப்பணியாளர்கள் என்பது வேறு. ஆட்சியை கைப்பற்ற சில லட்சம் பேர் போதாது. 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் பேர் ஒரு இடத்திலே திரண்டால் உங்களுக்கு பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்கு பயன்படாது. அதை வைத்து நாம் ஆட்சி மாற்றமே நிகழ்ந்துவிடும் என சொல்ல முடியாது. கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி இருக்கிறார்கள். மாநாடுகளுக்கு ஒன்றாவது மாநாடு இரண்டாவது மாநாடு என்றுதான் அதற்கு பெயர் சூட்ட முடிந்ததை தவிர, கருத்தியல் சார்ந்து அந்த மாநாட்டுக்கு பெயர் சூட்ட முடியவில்லை.
அந்த மாநாட்டில் சித்தாந்த தெளிவு இல்லை. நாங்கள் மாநாடு நடத்துகிறோம் எனில், 'வெல்லும் ஜனநாயக மாநாடு', 'தேசம் காப்போம் மாநாடு', 'மது ஒழிப்பு மாநாடு', 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என்கிற பெயரில் மாநாடுகளை நடத்துவோம். அதில் ஒரு கருத்து இருக்கும். ஆனால் வெறுமென ஒரு எண்ணை மட்டும் வைத்து மாநாடு போடுவதால், கருத்தியல் ரீதியாக அவர்களால் பொருந்த முடியவில்லை என்று அர்த்தம்.
தவெகவின் மாநாடு மூன்று அல்லது நான்கு மணி நேரம் நடக்கிறது. அதில் வெறும் கூச்சல், வெற்று சவடால்கள், விஜய் மாநாடு என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அதிகபட்சமாக ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற வேட்கை தெரிகிறது. எனவே திமுகவை வீழ்த்துவோம் என்கிற வெறுப்பு தெரிகிறது. மற்றபடி தவெக மாநாடு அரைத்த மாவையே அரைத்த மாநாடாகத்தான் தெரிகிறது. கடந்த மாநாட்டுக்கும் இந்த மாநாட்டுக்கும் இடையில் ஒரு மேம்பாடு இருந்திருக்க வேண்டும். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.
இல்லையெனில் நடப்பு அரசியல் குறித்த பேசவில்லை. குறிப்பாக தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை வைத்து பீகாரில் எதிர்க்கட்சிகள் பேரணியை நடத்திக்கொண்டிருக்கின்றன. முதல்வர் சிறை குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் குறித்தும், தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும், நாடு முழுவதும் இருக்கும் ஆணவ கொலைகள் குறித்தும், பெரியார், அம்பேத்கர் எதற்காக பாடுபட்டார்கள் என்பது குறித்து மாநாட்டில் எதுவும் பேசப்படவில்லை. எனவே சித்தாந்த ரீதியில் அவர்கள் இன்னும் தெளிவான இடத்திற்கு அவர்கள் இன்னும் வரவில்லை" என கூறியிருக்கிறார்.
முன்னதாக விஜய், தமிழக முதல்வரை அங்கிள் என்று கூறி விமர்சித்திருந்தார். இது அரசியல் நாகரிகம் இல்லாதது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications