41 குடும்பங்களுக்கு.. தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி! சொன்னதை செய்த திருமாவளவன்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று 41 குடும்பங்களுக்கும் நிவாரண தொகையை வழங்கினார்.
கடந்த மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனா உட்பட இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தது.

சம்பவம் நடந்த இரவு, விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காமலும், உயிரிழப்புக்கு பதிலளிக்காமலும் கரூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். முதல்வர் தொடங்கி பிரதமர் வரை உயிரிழப்பு குறித்து இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சென்னை வந்து 2 மணி நேரம் கழித்து விஜய், தனது x தளத்தில் இது குறித்து பதிவிட்டிருந்தார். அதேபோல கரூர் மருத்துவமனையில் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்களுக்கு உதவி செய்துக்கொண்டிருந்தனர்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு புறப்பட்டு கரூருக்கு வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தவெக கட்சியையும், அதன் தலைவர் விஜய்யையும் நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அறிவிக்கப்பட்டதை போலவே நிவாரண தொகையை திருமாவளவன் வழங்கியுள்ளார். விஜய் ரூ.20 லட்சம் நிவாரணத்தை அறிவித்திருந்தார். ஆனால், நிவாரணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில் திருமாவளவன் நிவாரணத்தை வழங்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications