மது ஒழிப்பு மாநாடு இதற்காகத்தானா? இதைவிட அசிங்கம் வேறு கிடையாது.. ஆதங்கப்பட்ட திருமாவளவன்
சென்னை: கூட்டணியில் பங்கு என்பதை தாண்டி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசிய வீடியோ பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்திருந்த திருமாவளவன், திமுக-விசிக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். மேலும், மது ஒழிப்பு மாநாடு கூட்டணிக்கானது அல்ல என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. ஆனாலும், தேர்தல் பரபரப்புகள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தன்வசப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த புதிய தலைமைக்கு பின்னரும் கூட இதுவரை எந்த தேர்தலிலும் அதிமுக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளரவில்லை. இடையில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, தற்போது தனியாக கழன்று வந்திருக்கிறது.

இப்படி எதிர்க்கட்சிகளின் நிலையற்ற தன்மையை உணர்ந்த விஜய், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, கட்சியின் கொடி, பெயரையும் வெளியிட்டார். இந்த சலசலப்புக்கு மத்தியில்தான் திருமாவளவன் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இது ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை மேலும் அதிகரித்தது.
மாநாடு அறிவித்தது மட்டுமல்லாது, இதில் பங்கேற்க அதிமுகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சி ஒன்று, மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்திருந்தது, கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தியதாகவே பேசப்பட்டது. இருப்பினும் இது குறித்து திருமாவளவன் விளக்கமளித்திருந்தார். எனவே இது தொடர்பான சலசலப்புகள் ஓரளவுக்கு ஓய்ந்தன.
ஆனால் பஞ்சாயத்து இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்று திருமாவின் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று, முடிந்து போன சலசலப்புகளுக்கு மூன்று புள்ளி வைத்து மீண்டும் கிளறிவிட்டது. அந்த வீடியோவில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். பங்கு எனில் தொகுதி ஒதுக்கீட்டில் பங்கு கிடையாது.. கேபினட் அமைச்சரவையில் பங்கு வேண்டும்" என்று திருமா பேசியிருந்தார். இது பழைய வீடியோதான். ஆனால் இந்த வீடியோவை தற்போது பதிவேற்றம் செய்ய வேண்டியதற்கான தேவை என்ன வந்தது? என்று உடன் பிறப்புகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
முதலில் மது ஒழிப்பு மாநாடு என்றார்கள், பின்னர் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்கள், இப்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் மத்தியில் வீடியோ கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த வீடியோ சிறிது நேரம் கழித்து நீக்கப்பட்டது, பின்னர் மீண்டும் இதே வீடியோ பதிவேற்றப்பட்டு, அதுவும் கொஞ்ச நேரம் கழித்து டெலிட் செய்யப்பட்டது. இந்த வீடியோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமா, "அட்மின் போட்டிருப்பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். ஆனால் அதேநேரம், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை என்றும்,
திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது, கூட்டணி தொடரும் எனவும் மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார். தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால் அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது என்றும் திருமா கூறியுள்ளார்.
அதாவது, "கண்ணீர் விட்டு கதறுகின்ற தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதில் எந்தவித தேர்தல் கூட்டணி கணக்கும் இல்லை. இதை நான் தேர்தலுக்கு நடத்தினால் இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை. கள்ளக்குறிச்சி மக்கள், நீங்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அதனால்தான் உடனடியாக போராட்டத்தை அறிவித்தேன். இது 100% மது ஒழிப்புக்கான அரசியலை மட்டும் முன்னிறுத்துகிறோம். இதில் 0.1% கூட தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது என" கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications