நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு- விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு என நடிகர் விஜய்யை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இவர் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை குறி வைத்து அரசியல் கட்சியை தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. இது போன்ற கருத்துகள் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.

எனினும் விஜய் அண்மைகாலமாக செய்யும் செயல்கள் அவர் அரசியலுக்கு வருவதற்கான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 14 ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்தநாளின் போது அனைத்து தொகுதிகளிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அது போல் பட்டினி தினத்தின் போது 234 தொகுதிகளிலும் மதிய உணவை வழங்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அவர் வலியுறுத்தியிருந்தார். அது 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது கிட்டதட்ட உறுதியானதாகவே கூறப்படுகிறது.
மேலும் விஜய் அந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் பேசுகையில் காசுக்கு ஓட்டு போடக் கூடாது என்றும் நாளைய வாக்காளர்களே என்றும் நீங்கள் முதல்முறையாக ஓட்டும் போடும் போது களத்தில் புதிய நல்ல பல தலைவர்கள் இருப்பார்கள் என்றும் பேசியிருந்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடித்துவிட்டால் முதல்வராகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.
கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் கிடைத்த புகழை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வராமல் அவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்களை ஓரங்கட்டி விட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம். இதில் தவறே இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும், வரவேற்கிறோம். அது போல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கரையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியிருந்த விஜய் கருத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம்.
தமிழகத்தில் மட்டும்தான் மார்க்கெட்டை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். மார்கெட் இழந்தவர்கள் அரசியலுக்கு வந்து மக்களை கவரலாம் என நினைக்கிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். சினிமா மூலம் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்வராகிவிடலாம் என சில நடிகர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் விமர்சித்திருந்தார்.
கல்வி உதவி விழாவில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை படியுங்கள் என விஜய் மாணவர்களிடம் பேசியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டி ட்விட் போட்டிருந்தது. அதில் நடிகர் விஜய்யின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையைத் தருகிறது. மாணவ, மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதுவும் விஜய் பேசும் போது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications