லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு.. வண்டியை ஸ்ட்ரைட்டா விட்ட திருமா.. ஸ்டாலினுடன் திடீர் மீட்டிங்!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் சிந்தனை செல்வன், ரவிக்குமார் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துப் பேசி வருகின்றனர். தவெகவுக்கு விசிக ஆதரவு தருமா இல்லையா என்ற பெரும் கேள்வி நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டி, தவெகவை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை திரட்டும் முயற்சியில் தவெக ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவ்க ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவு 116 ஆனது. விசிக சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை விசிக சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, இன்று மாலை ஆளுநரை மீண்டும் சந்தித்த தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆதரவு கடிதங்களை அளித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆட்சி அமைப்பதற்காக தவெகவுக்கு விசிக இதுவரை ஆதரவு கடிதம் வழங்காத நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துப் பேசி உள்ளனர்.
இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தவெக ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என நாளை முடிவு அறிவிக்கப்படும் என்றும் இரு வேறு விதமாக பரவும் கருத்துகள் மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும் என்றும் விசிக மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக விசிக திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னியரசு தமது எக்ஸ் பக்கத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமாவளவன் காலம், இனி உயர்வோம் மேலும் மேலும்!" என பதிவிட்டிருந்தார்.
விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம்.
எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை.
உளிகளை கொண்டு செதுக்க
அவர் வெறும் கல் அல்ல.
எழுந்து நிற்கும் இமய மலை.
நாளைய பொழுது
நமக்காய் விடியும்" எனத் தெரிவித்திருந்தார்.













Click it and Unblock the Notifications