"மறைச்சுடுவீங்களா".. எந்த கொம்பனாலும் முடியாது.. அரசியல்வாதி "இயேசுகிறிஸ்து".. அதிரவைத்த திருமாவளவன்
திருமாவளவன் இயேசுகிறிஸ்துவின் அர்ப்பணிப்பு குறித்து உரையாற்றினார்
சென்னை: நாம் அனைவரும், ஏழை, எளிய மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனின் தாயார் பெயர் பெரியம்மாள்... வயது மூப்பு காரணமாக இப்போது உடல்நலக்குறைவாக உள்ளார்.
அவர் தன்னுடைய சொந்த ஊரான அரியலூரில் உள்ள தன்னுடைய வீட்டிலே வசித்து வரும் நிலையில், நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அடிவயிறு கலங்கியது, அம்மாவுக்கு நெஞ்சுவலி! கலங்கிய திருமாவளவன்! பட்டென போனை போட்ட முதல்வர் ஸ்டாலின்!
பெரியம்மாள்
அதனால், பெரியம்மாள் தானே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்... இந்த விஷயம் தெரிந்த திருமாவளவன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று தன்னுடைய அம்மாவை சந்தித்துள்ளார். அப்போது, திருமாவளவனிடம் அவரது தாயார் ஊரில் தன்னை தனியாக விட்டுவிட்டு, நீ ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறாய்... திடீரென்று இரவு நெஞ்சு வலி வந்துவிட்டது.. நானே கிளம்பி மருத்துவமனைக்கு வந்துட்டேன்.. உயிர் போகும்போது நீ உடனிருந்தால் போதும் என்று சொல்லி உள்ளார்.
திருமாவளவன்
இப்படிப்பட்ட சூழலிலும் திருமாவளவன், அரசியல் நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.. அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதன் சுருக்கம்தான் இது: "அரசியல் என்பது பதவிக்காக மட்டுமில்லை.. தொண்டு செய்யவும்தான்.. பதவிக்குதான் போய்தான் தொண்டு செய்ய வேண்டும் என்பதல்ல.. பதவி இல்லாமலேயே தொண்டு செய்ய முடியும்..
கிறிஸ்தவம்
கிறித்தவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற உங்களிடம் நான் சொல்வது பொருத்தமாக இருக்காது.. ஏனென்றால், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ஊழியம் செய்து கொண்டிருக்கிற உங்களை பாராட்ட வாழ்த்தவும், பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன்.. கிறிஸ்தவத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய போதகர்கள், பாதிரியார்கள், பொது மக்கள் நலம் பெற வேண்டும், அவர்களை துன்பத்தில் இருந்து விடுவிக்க துணையாக இருக்கிறோம் என்று பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்..
திருமாவளவன்
தொண்டு செய்வது என்பது புதிதல்ல.. ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் தொண்டுள்ளம் தேவை.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களை நாம் வழிநடத்த வேண்டும்.. நாம் ஆளும் கட்சி கிடையாது.. ஆனாலும், ஆயிரக்கணக்கான பேர் நம் அலுவலகத்துக்கு வந்துகெண்டிருக்கிறார்கள்.. காரணம், நம் குறைகளை சொன்னால், காதுகொடுத்து திருமாவளவன் கேட்பார், அவர் கட்சி நிர்வாகிகள் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்தான்.. இத்தனைக்கும் அவர்களிடம் இருந்து நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை..
இயேசுவின் தாக்கம்
தேர்தலை மட்டுமே வைத்து நாம் குறி வைத்து செயல்படவில்லை.. கலெக்டர்களிடம் பேச வேண்டும்.. ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பேச வேண்டும்.. மக்கள் பிரச்சனையை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.. இதுவும் ஒருவகை தொண்டுதான்.. விசிக என்பது தொண்டு செய்வதற்கான இயக்கம்.. பதவிக்கான இயக்கம் இல்லை.. போராடுவதற்கான இயக்கம், பவிசுக்கான இயக்கம் அல்ல.. மக்களுக்கான இயக்கம், தனிநபர்களுக்கான இயக்கம் இல்லை.
நபிகள் நாயகம்
நாம் ஏன் இன்றைக்கும் ஏசுபெருமானை பேசி கொண்டிருக்கிறோம்? 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது.. போன அமைச்சரவையில் யார் யார் மந்திரிகளாக இருந்தார்கள் என்று கேட்டால் நமக்கு தெரியாது.. ஆனால், இயேசுவை பேசிக் கொண்டிருக்கிறோம்? ஏன் இன்றைக்கும் நபிகள் நாயகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் ஏன்? இவர்கள் எல்லாம் தேவதூதர்கள் அல்லது கடவுளின் மறு அவதாரங்கள் என்று சாதாரணமாக கடந்து போய்விடுகிறோம்..
இயேசு கிறிஸ்து
இருக்கட்டும்.. அவர்கள் பிறந்தார்கள்.. நம்மை போல் வளர்ந்தார்கள்.. நம்மை போல் வாழ்ந்தார்கள்.. பிறகு மறைந்தார்கள்.. இது இந்த மண்ணில் நடந்தது.. ஏசுபெருமான் பிறந்தார்.. 33 வயது வரை வாழ்ந்தார்.. 30 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்தார், அல்லது தலைமறைவாக இருந்தார்.. 3 ஆண்டுகள்தான் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.. வெறும் 3 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்ட ஒருவரை 2 ஆயிரம் ஆண்டுகளாக பேசி கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் எண்ணி பாருங்கள்.. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் மனித குலங்கள் இருக்கும்வரை பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்..
சிலுவைகள்
ஒரே விஷயம்தான்.. அந்த 3 ஆண்டுகளில் மக்களுக்காக மட்டுமே போராடினார்.. அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்காகவே வாழ்ந்தார் என்பதுதான்.. ஆன்மீகத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, அரசியல் பார்வையுடன் பாருங்கள்.. அவர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? அவர் நம்மை ரட்சிக்க வந்தார் என்று சொன்னது ஆன்மீக பாஷை.. அரசியல் மொழி என்னவென்றால், அவர் எளிய மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.. இதுதான் அரசியல் மொழி.. அவர் மக்களுக்காக மரித்து கொண்டார் என்பது ஆன்மீக மொழி,, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், ஆட்சியாளர்கள் அவரை மரண தண்டனை கொன்றார்கள் என்பது அரசியல் பார்வை..
மரண தண்டனை
அன்றைக்கு இருந்த மரணதண்டனை முறை அது.. இன்றைக்கு தூக்கு தண்டனை முறை உள்ளதுபோல், அன்றைக்கு சிலுவையில் அறைந்து, வதைத்து கொலை செய்வது நடைமுறையில் இருந்தது.. இயேசுவை பற்றின மற்ற கதைகள், சம்பவங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.. ஆனால், அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஏற்படுத்திய தாக்கம், இத்தனை வருடங்களாக இந்த மண்ணில் எதிரொலித்து கொண்டிருக்கிறது..
அம்பேத்கார்
அதேபோல, அம்பேத்கார் வாழ்ந்த காலத்தில் , எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்தார்கள்.. ஆனால், இன்றைக்கு எளிய மக்களால் கொண்டாடப்படக்கூடிய மாமனிதராக அம்பேத்கர் விளங்குகிறார்.. இனி எந்த கொம்பனாலும் அம்பேத்கரை மறைக்க முடியாது.. இருட்டடிப்பு செய்ய முடியாது.. எப்படி நபிகள் நாயகமும், இயேசு பிரானும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறார்களோ, அதுபோல, நிலைத்து நிற்கிறார் அம்பேத்கார்.. காரணம், அவரது அர்ப்பணிப்புதான்.. அதனால், பொதுவாழ்க்கைக்கு வரக்கூடியவர்கள், அர்ப்பணிப்புடன் தொண்டு செய்யுங்கள்" என்றார்.