2026ல் தமிழகத்தை ஆள்வோம்னு சொன்ன பாமக! இன்று மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது ஏன்? திருமா விளக்கம்
சென்னை: மாநில கட்சி என்ற அந்தஸ்தை பாமக இழந்தது குறித்து திருமாவளவனிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவினர் தேர்தலை புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அவர்களுக்கு பாடத்தை புகட்டி வருகிறார்கள். இந்தத் தேர்தலில் அவர்கள் ஒரு சில இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் என்பது அவர்கள் தனித்து நின்று பெற்றது அல்ல. பாமக, சில அரசியல் இயக்கங்கள், தனி நபர்களின் செல்வாக்கையும் கொண்டு தேர்தல் களத்தில் பாஜக இறங்கியது. இவர்களுடைய வாக்குகள் எல்லாம் பாஜகவின் வாக்கு வங்கி ஆகிவிட முடியாது.
சிதம்பரம் தொகுதியில் கூட பாஜக வேட்பாளர் ஒன்றரை லட்சம் வாக்குகளை பெற்றார். அது பாஜகவுக்கானது அல்ல, அந்த வாக்குகளில் பாஜகவுடையது எவ்வளவு என்பதை அவர்கள்தான் பிரித்து சொல்ல வேண்டும்? இது தோழமை கட்சியின் வாக்குகள் என்ற யதார்த்தத்தை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 35 தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியது அதிமுக தலைமை மீதான கசப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 40 க்கு 40 வென்றதால் தமிழகத்திற்கு எந்த நிதியும், திட்டங்களும் கிடைக்காது என பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
அதற்காக ஆளும் கட்சியில் போயா சேர்ந்து விட முடியும்? எதிர்க்கட்சியாக இருந்து என்ன கடமைகளை ஆற்ற முடியுமோ அதை ஆற்றுவோம். ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாப்போம். ஆளும் கட்சியின் அடாவடி போக்கு தலைத்தூக்குமேயானால் அதை கட்டுப்படுத்துவோம், தட்டி வைப்போம்.
அதுவே மக்களுக்கு செய்கிற நலம்தான். தமிழகத்திற்கும் கிடைக்கும் நலம்தான். விஜய பிரபாகரனின் வெற்றி வாய்ப்பை இழந்ததால் பிரேமலதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெற்றி வாய்ப்பு இழந்ததற்கு நான் உண்மையில் வருந்துகிறேன். பாஜகவில் 100 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 4 ஆயிரம் 5 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்கள்.
மாலேகான் என்ற தொகுதியில் பாஜக 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் மறு எண்ணிக்கைக்கு காங்கிரஸ் கோரியதை அடுத்து மறு எண்ணிக்கை நடந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக உண்மையில் வெற்றி பெறவில்லை. அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் அறிவித்துக் கொண்டார்கள் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
விருதுநகரில் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த விஜய பிரபாகரன், சட்டப்பூர்வமாக போராடினால் சரியாக இருக்கும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். 2026 ஆம் ஆண்டு பாமக வெற்றி பெறுவோம் என சொன்ன நிலையில் தற்போது மாநில கட்சி என்ற அந்தஸ்தையே இழந்தது குறித்து செய்தியாளர்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை, தருமபுரியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி கடைசி வரை போராடியும் திமுக வேட்பாளர் ஆர். மணியிடம் தோல்வியை சந்தித்தார். இந்த முறை பாமகவின் வாக்கு சதவீதம் குறைந்ததால் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது.












Click it and Unblock the Notifications