திருவள்ளுவருக்கு காவி உடையா? எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்! சங்பரிவார் கையில் அதிமுக என காட்டம்
சென்னை: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையிலான திராவிட இயக்கம் சங்பரிவார் கையில் சிக்கியுள்ளது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து எடப்பாடி பதிவிடும் நிலை தற்போது வந்துவிட்டது. அதிமுக தலைவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதில், எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்ததால் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

உலக தாய்மொழி தினம்
பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் மொழிக்கு தலைவர்கள் பலரும் தமிழை போற்றி கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இதில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ் மொழியை போற்றி பதிவிட்டதோடு, அது தொடர்பாக வெளியிட்ட புகைப்படத்தில் திருவள்ளூர் காவி உடை அணிந்த படத்தையும் பதிவேற்றி இருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் உடனே இந்த படத்தை அவர் நீக்கிவிட்டார். எனினும் அரசியல் தலைவர்கள் பலரும் எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
திருமாவளவன் கண்டனம்
விசிக தலைவர் தொல் திருமாவளவனும் அதிமுக சங் பரிவார் கையில் சிக்கியுள்ளதாக விமர்சித்தார். அவர் கூறுகையில், "வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ் தான் நாட்டை ஆளும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையிலான திராவிட இயக்கம் சங்பரிவார் கையில் சிக்கியுள்ளது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து எடப்பாடி பதிவிடும் நிலை வந்துவிட்டது. அதிமுக தலைவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.
இதே போன்று திமுக எம்பி கனிமொழியும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், "பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ட்வீட்
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-
"நம் உயிருக்கு நேராம்,
சமூகத்தின் விளைவுக்கு நீராம்,
உரிமைச் செம்பயிருக்கு வேராம்,
உயர்வுக்கு வானாம்,
பிறவிக்குத் தாயாம்,
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன். தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
மேலும் இந்தப் பதிவோடு தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் படங்களையும் இணைத்து பதிவிட்டிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து தான் அவர் அந்தப் படத்தை நீக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications