எம்ஜிஆர், ஜெயலலிதாவை தமிழ் தேசியவாதிகள் விமர்சிக்காதது ஏன்? கேள்வி கேட்கும் திருமாவளவன்!
சென்னை: திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் எம்ஜிஆர் என்ற விமர்சனம் உண்டு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்துத் தந்தவர் எம்ஜிஆர் என்றும் கூறி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், திமுக உடனான கூட்டணியை விசிக உறுதி செய்துள்ளது. சூழலை அறிந்து தொகுதி பங்கீட்டில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என்று கூறிய திருமாவளவன், அதற்காக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இதனால் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் விசிகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்பத்தூரில் திமுக சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், புதிதாகக் கிளம்பி இருக்கும் அமைப்புகள் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்ற பெயரில், தமிழ்த் தேசியத்தின் உண்மையான எதிரி யார் என்பதை மக்களுக்குச் சொல்லாமல், தமிழ்த் தேசியத்தின் எதிரி கருணாநிதியும், திமுகவும் தான் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
அவருக்கு நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்போம் என்று வெறுப்பை உமிழக் கூடிய அளவிற்குப் பேசுகிறார்கள். ஆனால் என்றாவது எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா குறித்து எங்காவது விமர்சித்தது உண்டா? ஏன் கருணாநிதி மட்டும் குறி வைக்கப்படுகிறார்.. பெரியார் அரசியலைத் தான் அண்ணா பேசினார். பெரியாரின் பேருருவம் அண்ணாவால் தான் வெளிப்பட்டது.
இல்லையென்றால் மறைக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆர் உருவானதால் ஒரு நன்மை உண்டானது. எம்ஜிஆர் கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார், விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்குக் காரணமாக இருந்தார். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமையப் பாதை போட்டுக் கொடுத்தார் என்ற விமர்சனங்கள் இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தேசியக் கட்சிகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் இருந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என்று அரசியல் சுழல நேர்ந்தது. காங்கிரஸ் வளர முடியாமல் போனது என்பதை விட, பாஜக காலூன்ற முடியாமல் போனது. காங்கிரஸ் இங்கே வலிமைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக பாஜக காலூன்றி இருந்திருக்கும். காங்கிரஸ் வலிமை குறைந்ததற்கு எம்ஜிஆரின் எழுச்சி காரணம்.
எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா வந்த போதும், கருணாநிதி தான் மையப் புள்ளியாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது ஊழல் விமர்சனங்கள் வைக்கப்படாதது குறித்தும் திருமாவளவன் பேசி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில், திருமாவளவன் நேரடியாக அதிமுகவின் தலைவர்களை விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications