விசிகவுடன் இணைந்து விஜய் ஆட்சியமைக்க நினைப்பதை பரிசீலிக்கிறோம்.. திருமாவளவன்
சென்னை: விசிகவுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என்று கூறிய திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் எடுக்கும் நிலைப்பாட்டை அறிந்து விசிக முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய்யை பாஜக இயக்குகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க சேர்ந்திருக்கிறது. ஆனால் தவெகவுக்கு இன்னும் 6 எம்எல்ஏ-க்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார்.

இந்த தேர்தலில் இந்த 3 கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தேர்தலுக்கு பின் கூட்டணி மாறிய வரலாறு இந்தியாவில் நடந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடே விசிகவின் நிலைப்பாடு என்று திருமாவளவன் கூறி இருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அதேபோல் ஆளுநரும் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதம் செய்து வருகிறார். இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தொடக்கம் முதலே தவெகவை கையாள்கிறது என்றே நம்புகிறேன். இப்போதும் விஜய்யை கட்டுப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இதுவும் என்னுடைய கருத்துதான்.
பாஜக அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது, நாங்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று விஜய் கூறியதை, விசிக பரிசீலனை செய்கிறது. இதில் உள்ள நிறை, குறை, எதிர்கால அரசியல் போக்கு ஆகியவற்றை பரிசீலனை செய்வோம். இதுதொடர்பாக முன்கூட்டியே நான் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது.
விசிக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம். கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாட்டை அறிந்து முடிவு எடுப்போம். ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைதான் விஜய் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதனையும் கருத்தில் கொண்டே முடிவு எடுப்போம். விஜய் பாதுகாப்பை கேட்கவில்லை. மத்திய அரசே பாதுகாப்பு அளித்தது. என்ன நெருக்கடியை கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
விஜய்யை கைப்பாவையாக வைத்து கொள்ள பாஜக நினைக்கிறது. ஆளுநரும் அதற்கேற்ப செயல்படுவது போல் தெரிகிறது. உடனடியாக விஜய்யை பதவியேற்க அனுமதிப்பது தான் சட்டப்பூர்வமாக சரி.. அதேபோல் விசிகவிடம் ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி இருக்கிறார். என்னுடன் பேசியுள்ளார். நாங்கள் ஆலோசித்து பதில் அளிப்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications