சங்கிகளின் தில்லுமுல்லு அரசியல்... பெங்களூருவில் நடந்தது என்ன? - திருமாவளவன் விளக்கம்
சென்னை: பெங்களூருவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பாஜக அமைச்சர்தான் 5 நிமிடங்கள் கூட பேச முடியாமல் வெளியேறியதாகவும், இது சங்கிகளின் தில்லுமுல்லு அரசியல் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவை அடுத்துள்ள சர்ஜாப்பூரில் அம்பேத்கர் சேவா சமிதி அமைப்பு சார்பில் கடந்த 24ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் திருவிருவ சிலையை திறந்து வைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அம்பேக்தருக்கு வில்லன் மோடி
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த திருமாவளவன் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். "இந்த நாட்டின் ஹீரோ அம்பேத்கர். அன்று அம்பேத்கருக்கு வில்லனாக இருந்தவர் மகாத்மா காந்தி. இன்று அம்பேத்கருக்கு வில்லனாக இருப்பவர் நரேந்திர மோடி. நவீன இந்தியாவை வடிவமைத்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர் இந்த நாட்டின் தந்தை. அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் அடிப்படையிலேயே இவர்கள் இந்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார்கள்.

மோடி குறித்து விமர்சனம்
அடித்தட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கைவிட்டுவிட்டார். அடித்தட்டு மக்களுக்காக அவர் எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்." என விமர்சித்தார். பேச்சை முடித்துக்கொண்டு திருமாவளவன் எழுந்து செல்ல முயன்றபோது பாஜக அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளர் படாபட் சீனிவாஸ், திடீரென மைக்கை பிடித்து திருமாவளவன் சார். மோடிதான் நாட்டின் ஹீரோ என்றார்.

திருமாவளவனுக்கு பாஜகவினர் எதிர்ப்பு
"காங்கிரஸ் இந்த நாட்டிற்காக என்ன செய்தது? பிரதமர் மோடியே இந்த நாட்டை உலக மேடையில் புதிய உயரத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்." என சத்தமாக பேசினார். ஆனால், திருமாவளவன் அதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவை தற்போது பாஜகவினர் பகிர்ந்து திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர்.

திருமாவளவன் விளக்கம்
இதுகுறித்து ட்விட்டரில் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், "ஏப்ரல்-24 அன்று கர்நாடகா- சர்ஜாபுராவில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலை திறப்பு விழாவின் போது என்ன நடந்தது என்பது குறித்து அந்நிகழ்வை ஒருங்கிணைத்த தலைவர்கள் ஸ்ரீராமுலு, வேணு உள்ளிட்ட பலர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர்.

சங்கிகளின் தில்லுமுல்லு அரசியல்
பாஜக அமைச்சர் நாராயணசாமி தான் ஐந்து நிமிடங்கள் கூட பேச இயலாமல் மேடையை விட்டு இறங்கி ஓடினார் என்றும் விசிக தலைவர் 55 நிமிடங்கள் உரையாற்றினார்; அவருடைய உரைக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு நிலவியது. என்றும் கூறி உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தனர். சங்கிகளின் தில்லுமுல்லு அரசியலை அம்பலப்படுத்தினர்." எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications