வயதைக் குறைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திருமாவளவன்! என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: பிஎம் ஜெய் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மூத்த குடிமக்களின் வயதை 70 லிருந்து 60 ஆகக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆயுஷ்மான் பாரத் மருத்துவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சுமார் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள் அனைவருக்கும் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்படு ம் இலட்சக்கணக்கான குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதலாக வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9 வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடி மக்களுக்குமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இந்த திட்டம் உதவும். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ், பயன்பெறும் மூத்த குடிமக்களின் வயதை 70 லிருந்து 60 ஆகக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அதில்," 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்று தெரிய வந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவு படுத்தினால் பரவலாகப் பலர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். தற்போதைய திட்டத்தில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப் புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மூத்த குடிமக்களிலேயே மாற்றுத் திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5177 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்." என அந்த கடித்தத்தில் விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications