இளைஞர்களை தற்குறி என சொல்வதில் உடன்பாடு இல்லை.. மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது.. திருமாவளவன் பேச்சு
சென்னை: இளைஞர்களை தற்குறி என்று சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களை எப்போதும் நாம் கொச்சை படுத்தக் கூடாது. நமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் நம்முடைய வாக்காளர்கள், மக்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் மதசார்பற்ற கூட்டணியே வெற்றி பெறும். திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்.
திருமாவளவன் கூறியதாவது:- தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் நிறுவனங்கள் கணித்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் இதற்கு நேர்மாறான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்து இருக்கிறோம். அதன் அடிப்படையில் மக்களின் ஏகோபித்த ஆதரவு மதசார்பற்ற கூட்டணிக்கு தான்.. எனவே எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

ஒரு நாளும் ஈடேறாது
ஓரிரு தொகுதிகளில், அதாவது ஓரிரு இடங்களில் உட்கட்சி பிரச்சினை காரணமாக வேலை செய்யவில்லை என்று மட்டும் தான் சொல்லியிருந்தேன். ஆனால் எல்லாரும் இதனை திரித்து கூறுகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்ற நினைத்து ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது. அவர்களது எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது. அவர்களின் கனவு பலிக்காது. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பலிகடா ஆகாது.
வட இந்திய மாநிலங்களை சேர்ந்த ஒரு சில நிறுவனங்கள் தான் விஜய் கட்சி வெற்றி பெறும் என சொல்லியிருக்கிறது. ஆக்சிஸ் மை இந்தியா, ஜேவிசி உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணியை கொண்டவை. பாஜக கருத்தை ஆதரிக்கக் கூடிய, வலதுசாரி சிந்தனைகளை ஆதரிக்க கூடிய நிறுவனங்கள் மட்டும் தான் இப்படி கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
விஜய்யை வைத்து சூதாட்டம் நடக்கிறது
விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சூதாட்ட கும்பல் பரப்பும் வதந்தி தான் இது. தேர்தலுக்கு முன்பு இப்படித்தான் திமுகவை முன் வைத்து சூதாட்டத்தை நடத்தினர். அகில இந்திய அளவில் இது நடைபெறுகிறது. இப்போது தேர்தல் நடந்து முடிந்த பிறகு விஜய்யை வைத்து சூதாட்டத்தை நடத்துகிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் விஜய் கட்சி 41 சதவீத வாக்குகள் பெறும் என கணித்துள்ளதும் பிட்டிங் தான்.. சூதாட்டம் தான்.. நூறு சதவீதம் சூதாட்ட நடவடிக்கைகளுக்கான ஒரு மீடியா ஹைப் தான். நாளை தேர்தல் முடிவில் பாருங்கள் எல்லாம் தெரிந்துவிடும். களத்தில் நான் 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்திருக்கிறேன். நேரடியாக நான் பார்த்த வகையில், திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்.
தற்குறி என சொல்வதில் உடன்பாடு இல்லை
இளைஞர்களை தற்குறி என்று சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களை எப்போதும் நாம் கொச்சை படுத்தக் கூடாது. நமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் நம்முடைய வாக்காளர்கள், மக்கள்.. அவர்களை உரிய முறையில் மதிக்க வேண்டும் என்பது எனது கருத்து. விசிக எப்போதும் இப்படி பேசியதில்லை. இந்த சொல்லாடலை நாங்கள் ஒருபோதும் கையாண்டதில்லை.
நூறு சதவீதம் இளைஞர்கள் எல்லாரும் விஜய் பின்னாடி போனது போன்று கட்டமைக்கப்படுகிறது. சோஷியல் மீடியாக்கள் முன்பு எல்லாம் கிடையாது. ஆனால் இப்போது சோஷியல் மீடியாக்களில் இப்படி ஒன்று பரவுகிறது. விஜய்க்கு வாக்களிக்காத இளைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க.. ஆனால் அதனை யாரும் பேசுவதில்லை. அரசியல் புரிதல் உள்ள பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி பேசுவதில்லை. எல்லாரும் நடிகர் பின்னாடி இருக்கிறார்கள் என்றால் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.














Click it and Unblock the Notifications