கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு தீர்ப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த திருமா!
சென்னை : கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மத்திய மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக நடைபெற்றது. யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ்
கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், கோகுல்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாகவும், ஏற்கனவே வழங்கிய சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று யுவராஜுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. மேலும் 10 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம். அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் துணிந்து வாதாடி நீதிகாத்த வழக்குரைஞர்கள் ப.பா.மோகன், லஜபதிராய் உள்ளிட்ட அனைவருக்கும் சிறுத்தைகளின் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications