ஆட்சியில் பங்கு கோரிக்கை.. திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகாது.. அடித்து சொல்லும் திருமாவளவன்!
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் தற்போது இல்லை என்று கருதுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வலதுசாரி கட்சிகள் மேலோங்கும் நேரத்தில் ஆட்சியில் பங்கு கேட்டால் கூட்டணி பலவீனமடையும் என்று கூறியுள்ள திருமாவளவன், கூட்டணி ஆட்சி கோரிக்கையை தற்போது விசிக எழுப்பவில்லை.. அதனை கைவிடவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைமையும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கேட்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று நேரடியாகவே அறிவித்துவிட்டார்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் கொஞ்சமும் குரலை இறக்காமல், அதே முழக்கத்தை முன் வைத்து வருகின்றனர். இதனால் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் கோரிக்கை வைப்பது இயல்பானது தான்.
விசிக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இந்த கோரிக்கையை வைத்து வருகிறோம். 2016ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பெயரில் ஒரு கூட்டரங்கை நடத்தி இருக்கிறோம். இதனை சாத்தியப்படுத்தும் சூழல் தமிழ்நாட்டில் கனியவில்லை. இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளோம். இந்த தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வலதுசாரிகளின் கைகள் ஓங்கிவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
இப்படிப்பட்ட கோரிக்கையை எழுப்புவதன் மூலமாக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு, பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.. இதன் மூலமாக வலதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதனால் விசிக இந்த கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அந்த கோரிக்கையை நாங்கள் கைவிட்டுவிடவில்லை.
காங்கிரஸ் கட்சி இப்படியொரு கோரிக்கையை வைக்கிறது என்றால், அந்தக் கட்சிக்கு உரிமை இருக்கிறது. இது கூட்டணி கட்சிகளுக்குள் பேசி தீர்க்கப்படும். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று கூறி இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி அந்த கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. அப்படி எழுப்புவதனால் கூட்டணி சிதறிவிடும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்கும். நான் நம்புகிறேன்.. அவர்கள் பேச்சுவார்த்தையில் இதனை சுமூகமாக தீர்ப்பார்கள். இரு கட்சிகளின் தலைமையும் பேசி சுமூக தீர்வை எட்டுவார்கள். ஏற்கனவே டெல்லிக்கு அனைவரையும் அழைத்து கூட்டணி தொடர்பாக பேசக் கூடாது என்று காங்கிரஸ் தலைமை அவர்களுக்கு கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேசிய தலைமையே முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications