தனிநாடு கேட்ட மயில்சாமி.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாஜகவை எதிர்த்தவர்! திருமுருகன் காந்தி ரீவைண்ட்
ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் மயில்சாமி என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்து உள்ளார்.
சென்னை: இன்று காலமான நடிகர் மயில்சாமி, ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்றும் மக்கள் மத்தியில் பாஜகவை அம்பலப்படுத்தியவர் எனவும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்து இருக்கிறார். மக்கள் மீதான மயில்சாமியின் நேசமும், தமிழர் மீதான அவரது உணர்வும் நினைவுகூரத்தக்கது என்றும் அவர் கூறி உள்ளார்.
நடிகர் மயில்சாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சமூக உணர்வுடன், மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தவர். மக்களுக்காக போராடுபவர்களோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அச்சமற்ற மனதுக்கு சொந்தக்காரர்.
ஒருமுறை சாலிகிராமத்தில் குழந்தையுடன் சென்றுகொண்டிருந்த போது தனது காரை நிறுத்தி என்னிடம் போராட்டங்கள் குறித்து பேசி வாழ்த்துகள் தெரிவித்தார். இது நடந்து பத்து ஆண்டுகள் இருக்கும். தமிழர் அரசியலை, அவலத்தை தொடர்ந்து கவனிப்பவர் என்று உணர்வு பொங்க பேசினார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்
பின்னர் அவரை 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல்நாள் சந்தித்தோம். முதல் நாள் மெரினாவில் இளைஞர்கள் கூடிக்கொண்டிருந்த சமயத்தில், அப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்திருந்த அரசியல் தலைமைகளை எல்லாம் ஒரு குழு விரட்டியடிக்க சொன்னது. தமிழர் உரிமைகளை பேசுவதற்கு வழியில்லாமல் தடைகளை ஏற்படுத்தினார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சீரழிவு குழு
இது முதல்நாள் காலை 10 மணியளவில் நடந்து கொண்டிருந்தது. நானும், பிரவீனும், பிற மே17 இயக்கத் தோழர்களும் அங்கிருந்தவர்களிடம் உரையாட ஆரம்பித்து போராடத்தின் திசையை குறித்து பேச ஆரம்பித்தோம். இதை தடுப்பதிலேயே சீரழிவு குழு கவனமாக இருந்தது. இதை மீறியே தமிழர் உரிமை, மோடி அரசின் எதிர்நிலை, இந்துத்துவ அரசியலின் தமிழர் வெறுப்பு என்பதை விளக்கியதை இக்கும்பலால் ஏற்க இயலாமல் எங்களை வெளியேற்ற பெரு முயற்சி எடுத்து குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள்.

பாஜகவுக்கு எதிராக பேசியவர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல்நாள், காலையில் குவிந்தவர்களை அரசியல்படுத்தி, பாஜகவின் திரிபு அரசியலை அம்பலப்படுத்தி அப்போராட்டத்தை ஒழுங்குபடுத்த இந்நிகழ்வே உறுதுணையானது. அன்று முழுவதும் தன்னாலியன்றளவு மக்களை உற்சாகப்படுத்தி பாஜக அரசியலுக்கு எதிராகவும், தமிழின அரசியலை எளிய மொழியிலும் மக்களிடத்தில் கடத்தினார்.

தனி நாடு கேட்டார்
இச்சமயத்திற்குள்ளாக எங்களால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சனநாயகக் கோரிக்கை உட்பட தமிழின கோரிக்கைகளை மக்களிடத்தில் கொண்டு சென்று பெரும் திரளை அணியாக்க இயன்றது. இப்பெரும்பணியில் மயில்சாமி அவர்களின் பங்களிப்பு மறக்க இயலாதது. மேலும் அன்று இரவு நடந்த தொலைக்காட்சி பேட்டி, விவாதத்தில் 'தமிழனை வஞ்சித்துகொண்டே இருந்தீங்கன்னா நாங்க தனி நாடு கூட எங்களுக்குன்னு உருவாக்கிக்குவோம்' என்று கலகக்குரல் எழுப்பினார்.

எளிய மக்களின் குரல்
நடிகர்களிடத்தில் இதுபோன்ற துணிச்சலை காண்பது மிக அரிது. அதிமுக கட்சியில் இருந்தாலும், எம்.ஜி.ஆர் ரசிகராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அனைவரிடத்திலும் நட்பையும், தமிழின உணர்வில் சமரசம் செய்த அதிமுக தலைமையையும் விமர்சித்தவர். எளிய மக்களின் குரலாக எளிய அரசியல் மொழியில் பேசியவர். 2017 நினைவேந்தலுக்காக சிறை சென்று குண்டர் சட்டம் ஏவப்பட்டு பின் விடுதலையான முதல் பொதுக்கூட்டத்தில் மேடையேறி எங்களுக்கு மரியாதை செய்தார்.

இறுதி மரியாதை
மேடையில் அமரச்சொன்ன போது அதை மறுத்து மக்களோடு சேர்ந்து அமர்ந்தார். எவ்விடத்திலும் தான் நடிகனென்றோ தனது புகழுக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டுமென்றோ அரசியல் களத்தில் பங்கேற்று நான் பார்த்ததில்லை. ஆனால் சாமானிய மக்களிடத்தில் எளிய வழியில் அரசியலைப் பேசினார். மக்கள் மீதான அவரது நேசமும், தமிழர் மீதான அவரது உணர்வும் நினைவுகூரத்தக்கது. அன்பிற்கினிய தோழருக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகிறேன்." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications