சென்னையாவது பரவாயில்லை.. திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை இன்னும் மோசம்
சென்னை: சென்னையில் தான் தண்ணீர் இல்லை என்று இல்லை, சென்னையை சுற்றி எங்குமே தண்ணீர் இல்லை என்பதை எதார்த்தமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் மட்டுமல்ல கரண்டும் இல்லை, இதனால் கடும் அவஸ்தையில் மக்கள் ஊரை காலி செய்து வேறு ஊர்களுக்கும் இடம்பெற தொடங்கி உள்ளனர்.
ஆந்திராவை ஒட்டி உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் மதிய வேளையில் செருப்பு இல்லாமல் நடந்து சென்றால், நெருப்பில் நடப்பது போன்ற அனுபவம் ஏற்படும். தண்ணீரை பாத்திரத்தில் வைத்து சென்றால் உடனே சூடாகவிடும். வயதானவர்கள் நடந்த சென்றால் மயங்கிவிழுந்து விடுவார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இங்கு ஒரு நாளும் வெயில் சதமடிக்காமல் விடுவதில்லை.

இப்படி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தாகம் தீர்க்க தண்ணீரை தேடினால் தண்ணீரும் கிடைப்பது இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் வழங்கி வந்த ஏரிகள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிட்டது சென்னை. இதனால் மக்கள் பகலில் தண்ணீரை தேடி அலைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருவள்ளூர் மற்றும் கிராம பகுதிகளில் தற்போது அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பகலில் தண்ணீர் தேடி தவித்த மக்கள், இரவில் மின்சாரம் இன்றி புழுக்கத்தால் தவித்து வருகிறார்கள். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீர் என மின்சாரம் மாயமாகிவிடுகிறது.
சில நேரங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங மெஷின், மிக்ஸி போன்றவற்றை இயக்க முடிவதில்லை. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் நொந்து போன பல மக்கள், வீடுகளை காலி செய்து வேறு பகுதிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications