சென்னையை சூழ்ந்துள்ள சிவப்பு தக்காளிகள்.. வேலூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டும் மழை.. வெதர்மேன்!
Recommended Video
சென்னை: சென்னையை சூழ்ந்துள்ள மழை மேகங்களால் இந்த நாள் ஓர் அற்புத நாளாக இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காற்றின் திசை மாற்றம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சிவப்பு தக்காளி
இந்நிலையில் சென்னை மற்றும் வட தமிழகத்தின் மழை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை அறிவிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன். இதுதொடர்பாக அவர் போஸ்ட் செய்துள்ள பதிவில், சென்னை சிவப்பு தக்காளியால் சூழப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
அற்புதமான நாள்
அதாவது சென்னை முழுவதும் மழை மேகங்களால் சூழப்பட்டிருப்பதை அவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இது ஒரு சிறந்த நாள்
சூரிய உதயத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தால் ஆச்சரியப்படமாட்டேன். இது போன்ற நாட்கள் கிடைப்பது அரிதானது, இதனை அனுபவியுங்கள். வட தமிழகத்தின் வானிலையில் இது ஒரு சிறந்த நாள்.
பரவலாக மழை
தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் சிறந்த நாட்களில் ஒன்றுதான். பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
இடைவிடாமல் கொட்டும் மழை
தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர், பாண்டி உட்பட பல பகுதிகள் நல்ல மழையை பெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.
தீவிரமாக பெய்கிறது
வேலூரில் இதுபோன்ற மழையை நான் நீண்ட காலமாக பார்த்ததில்லை. தெளிவாக தெரியாத அளவுக்கு தீவிரமாக மழை பெய்து வருகிறது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு
வேலூரில் 24 மணிநேரத்தில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு மழை பெய்திருக்கிறது. 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதிதான் 24 மணி நேரத்தில் 106 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது.
எதிர்பார்க்கலாம்
காற்றின் திசையில் பெங்களூரும் உள்ளதால் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும் என அங்கும் எதிர்பார்க்கலாம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.